Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!

Su.tha Arivalagan
Feb 15, 2026,03:05 PM IST

- அ. சீ. லாவண்யா


மகா சிவராத்திரி என்பது  மிகவும் விசேஷம் நிறைந்த புனித நாளாகக் கொண்டாடப்படுகிறது. பரமசிவனை வழிபடும் இந்த திருநாள், ஆன்மிக விழிப்புணர்வையும் உள்ளம் தூய்மையையும் அளிக்கும் சிறப்புடையது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் இந்த நாள் வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து இறைவனுக்கு அர்ச்சனைகள், தீபாரதனை, அபிஷேகங்கள் செய்து வழிபாடுகின்றனர்.


இந்த நாளில் மக்கள் சிவாலயங்களில் சென்று சிவ பெருமானுக்கு நடைபெறும் நான்கு கால பூஜையில் கலந்து கொண்டு பூஜை செய்தால் தங்கள் நினைத்த செயல்கள் கைக்கூடும் நேரம் இதுவே ஆகும்.


சிவம் என்பது நன்மையும் அமைதியும் குறிக்கும்.  ராத்திரி என்பது இரவு. எனவே, சிவராத்திரி என்பது அறியாமை என்னும் இருளை அகற்றி ஞான ஒளியை தரும் இரவாகக் கருதப்படுகிறது.




இந்த நாளில் மக்கள் சிவ மந்திரங்கள் தேவாரம், திருவாசகம் மற்றும் பஞ்சாச்சரம் மற்றும்  ஓம் நமச்சிவாய, சிவாய நம போன்ற எளிய மந்திரங்களை ஜெபிக்கலாம். 


புராணங்களின்படி, இந்த நாளில் சிவப்பெருமான் லிங்க ரூபமாக வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரவில்தான் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி திருக்கல்யாணம் நடைபெற்றது என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் போன்ற புகழ்பெற்ற சிவாலயங்களில் மிகுந்த விமரிசையாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.


இன்று அனைத்து சிவ கோவில்களும் மக்களின் வருகை அதிகமாகவும் இருக்கும். சிவன் கோவில்களில் இன்று திருவிழா போல மிக மகிழ்ச்சியாக அனைத்து பூஜைகளும் நடைபெறும்.


சிவராத்திரி உருவான கதை


ஒரு வேடன் காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்தான். ஒரு இரவு அவன் ஒரு மரத்தில் ஏறி தங்கினான். கீழே ஒரு சிவலிங்கம் இருப்பதை அவன் அறியவில்லை. குளிரால் அவன் விழித்திருந்தான். மரத்தில் இருந்த இலைகளை அரிந்து கீழே போட்டான். அவை சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அது வில்வ இலைகள் ஆகும். 


அவன் அறியாமலே நோன்பிருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபட்டதனால், அவனுக்கு சிவபெருமான் அருள் கிடைத்து முக்தி பெற்றான் எனக் கூறப்படுகிறது. இந்த கதை சிவராத்திரியின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது.


இந்த சிவராத்திரி நமக்கு அமைதி, ஆரோக்கியம் மற்றும் ஆன்மிக ஒளியை வழங்கட்டும். ஓம் நமசிவாய!