வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!

Su.tha Arivalagan
Aug 23, 2025,02:53 PM IST

மும்பை: மகாராஷ்டிராவில் வாட்ஸ் ஆப்பில் வந்த கல்யாண அழைப்பிதழை திறந்து பார்த்துள்ளார் ஒரு அரசு ஊழியர். அடுத்த விநாடியே அவரது போன் ஹேக்காகி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1. 90 லட்சம் திருடப்பட்டுள்ளது.


சைபர் கிரைம் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்த ரூபத்தில் என்றில்லாமல் விதம் விதமாக தினுசு தினுசாக நமது பணத்தை திருடி வருகிறார்கள் சைபர் குற்றவாளிகள். படிக்காதவர்கள் மட்டுமல்ல, படித்தவர்களும் கூட அதிக அளவில் ஏமாறுகிறார்கள். இப்படித்தான் மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் ஒரு அரசு ஊழியர், ஒரு திருமண அழைப்பிதழால் ரூ. 1.90 லட்சம் பணத்தைப் பறி கொடுத்துள்ளார்.




அந்த அரசு ஊழியருக்கு, ஆகஸ்ட் 30 அன்று ஒரு திருமணத்திற்கு வருமாறு வாட்ஸ்அப் மூலம் ஒரு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது. அதில், வரவேற்கிறோம். திருமணத்திற்கு கட்டாயம் வாருங்கள்) என்று கூறப்பட்டிருந்தது. மேலும் ஒரு திருமண அழைப்பிதழின் PDF கோப்பும் இணைக்கப்பட்டிருந்தது.


இதைப் பார்த்த அந்த அரசு ஊழியர் சற்றும் சுதாரிக்காமல் டக்கென அந்த இன்விடேஷனை ஓப்பன் செய்து பார்த்துள்ளார். ஆனால் அது அது வாட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசிகளை ஊடுருவி, முக்கியமான தரவுகளைத் திருடும் நோக்கில், திருமண அட்டைகளாக வேடமிட்ட ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பேக்கேஜ் (APK) என்பது அவருக்குத் தெரியவில்லை.


பாதிக்கப்பட்டவர் அந்தக் கோப்பை கிளிக் செய்தவுடன், சைபர் குற்றவாளிகள் அவரது தரவுகளை அணுகி ரூ. 1,90,000  பணத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட அந்த நபர் ஹிங்கோலி காவல் நிலையத்திலும், சைபர் குற்றப்பிரிவு துறையிலும் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நமது வாட்ஸ் ஆப்பில் வரும் அடையாளம் தெரியாத எண்களிலிருந்து வரும் எந்த இணைப்பையும் நாம் திறக்கக் கூடாது. அப்படி திறந்தால் இப்படித்தான் ஏமாற வேண்டியிருக்கும். கவனமா இருங்க மக்களே.