மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
சென்னை: 14 வயதான சிறுமியை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியதாக மலையாள நடிகை மினு முனீர் சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகைகள் தொடர்பான பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் நடிகை மினுவும் திரையுலகினர் மீது புகார் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது அவரே பாலியல் வன்முறையில் இறங்கியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து சென்னை திருமங்கலம் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் மினு குரியன் முனீர். இவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கவர்ச்சி வேடத்திலும் நடித்துள்ளார். புல்லுக்கட்டு முத்தம்மா என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இவர் மீது கேரளாவில் ஒரு புகார் எழுந்தது. அதாவது 2024ம் ஆண்டு தனது உறவினர் மகளான 14 வயது சிறுமியை நடிக்க வைக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்தாராம். ஆனால் நடிக்க வாய்ப்பு வழங்காமல், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் அளித்த புகாரில், தன்னை பாலியில் ரீதியாக நடத்தியதாக கூறியிருந்தார்.
இதையடுத்து கேரள போலீஸார், குற்றச் செயல் நடந்ததாக கூறப்படும் சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகாரை அனுப்பி வைத்தனர். போலீஸார் புகாரைப் பதிவு செய்து விசாரணை நடத்தி தற்போது மினுவைக் கைது செய்துள்ளனர். அவர் இந்தப் பெண்ணை மட்டும்தான் இப்படி பயன்படுத்தினாரா அல்லது வேறு சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று இப்போது விசாரணை நடந்து வருகிறது.