வரம் வாங்கிப் பிறந்தவர்கள் நாம்... இருப்பினும் வருமுன் காப்போம்!

Su.tha Arivalagan
Mar 24, 2026,04:36 PM IST

சொ. மங்களேஸ்வரி


என்புருக்கி நோய் அல்லது காச நோய் என்பது மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நுரையீரலைப் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். இந்நோயானது பொதுவாக மூச்சுத் தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோய் உண்டாக்கினாலும், நரம்பு தொகுதி, நிணநீர் தொகுதி ,இரைப்பை குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப் பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பல பகுதிகளிலும் நோய் உண்டாக்க வல்லவை.


 இது இருமல் தும்மல் மூலம் காய்ச்சல் பரவுகிறது. நீண்ட கால இருமல், சளியுடன் ரத்தம் வருதல், நெஞ்சுவலி, காய்ச்சல் மற்றும் சோர்வு, பசியின்மை, இரவு நேர வியர்வை மற்றும் எடை இழப்பு ஆகியவை இதன் வழக்கமான அறிகுறிகள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதோ அல்லது தும்மும்போதோ காற்றில் பரவும் நுண் துகள்கள் மூலம் அருகில் இருப்பவர்களுக்கும் இந்நோய் பரவுகிறது. 


தொல்பழங் காலத்திலேயே காசநோய் இருந்திருப்பது அறியப்பட்டுள்ளது. இற்றைக்கு கிட்டத்தட்ட 18,000 வருடங்களுக்கு முன்னர் இருந்திருக்கக் கூடிய எருமையின் எச்சங்களிலிலிருந்து Mycobacterium tuberculosis கண்டு பிடிக்கப்பட்டது. Tuberculosis மாடுகள் / கால்நடைகளிலிருந்து தோன்றி, மனிதர்களைத் தாக்கும் திறனுடன் மாற்றப்பட்ட ஒரு இனமா, அல்லது வெவ்வேறு இனங்களில் தொற்று ஏற்படுத்தும் திறமை கொண்ட ஒரு பொது மூதாதையரிலிருந்து தோன்றி, பின்னர் திரிபடைந்த ஒரு இனமா என்ற நிலை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லையாம். இருப்பினும், மிக அண்மைக்காலத்தில் உருவாகி மாடுகளைத் தாக்கும் மை.போவிசு (M. bovis) இலிருந்து நேரடி வழித் தோன்றலாகவே மை. டியூபர்குலோசிசு (M. tuberculosis) திரிபடைந்து வந்திருக்கிறது என்பது தெளிவாக உள்ளது.




முற்காலத்தில் இந்த நோயானது ‘உருக்கி நோய்' எனவும் அழைக்கப்பட்டது. இரத்த இருமல், காய்ச்சல், வெளிறிய உடல் போன்ற அறிகுறிகளால் அழிவு ஏற்படுவதால் இநோயை இப்பெயரிட்டு அழைத்தனர். உருக்குதல் என்ற சொல்லின் கிரேக்க சொல்லான phthisis என்ற சொல்லின் பெயர் கொண்டும் இந்நோய் அறியப்பட்டிருந்தது. இந்நோயின் ஒரு நிலையில், தொற்றானது குருதித் தொகுதியினுள்ளும் சென்று, அந்நிலையில் தினை போன்ற தானியத்தின் தோற்றத்தில் சிறிய புண்கள் X - கதிர் படத்தில் காணப்படுகிறது. அது குருனைக் காசநோய் (Miliary tuberculosis) என அழைக்கப்படுகிறது. 1882 இல் Tuberculosis bacillus ஐ , தனிப்படுத்தி, பிரித்தெடுத்த  அறிவியலாளர் ராபர்ட் கொக் இன் நினைவாக இந்நோய் 'கொக் நோய்' (Koch disease) எனவும் அழைக்கப்படுகிறது.


இயந்திர தொழில் புரட்சிக்கு முந்தைய காலத்தில், இந்நோயானது இரத்தக்காட்டேரித்தனமாக கருதப்பட்டது. காரணம் ஒரு குடும்பத்தினர் இந்நோயினால் இறந்து போனபின்னர், அக்குடும்பத்திலுள்ள இந்நோய்த் தொற்றுக்குள்ளான ஏனைய அங்கத்தினர், சிறிது சிறிதாக உடல்நலம் குன்றியவர்களாக வருவார்கள். அந்நிலைமைக்குக் காரணம் அந்த இறந்துபோனவரின் ஆவியே என்றும், அது மற்றவர்களின் வாழ்க்கையை உறிஞ்சி அழிப்பதாக மக்கள் நம்பி வந்தனர். மேலும் காசநோய்க்கு ஆட்பட்ட மனிதர்களில் தோன்றும் அறிகுறிகளும் அவர்களை அவ்வாறு நம்ப வைத்திருந்தது. அதிக ஒளியினால் தாக்கப்படக் கூடிய சிவந்த, வீங்கிய கண்கள், வெளிறிய தோல், மிகவும் குறைந்த உடல் வெப்பம், பலவீனமான இதயம், இரத்தத்தை வெளியேற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் அவர்களை அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கைக்கு தள்ளியிருந்தது. இரத்தம் உறிஞ்சப்படும் காரணத்தாலேயே இவ்வாறு இருமும்போது இரத்தம் வருகிறது என்று நினைத்தார்கள். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இந்த காச நோயானது சுய இன்பம் மேற்கொள்ளும் காரணத்தால் ஏற்படுவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவியிருந்திருக்கிறது.


1020 ஆம் ஆண்டில் இபுன் சினா  என்பவர் எழுதிய மருத்துவத்தின் அடிக்கோட்பாடுகள் (The Canon of Medicine) என்னும் நூலில் இருந்து இந்நோய் பற்றிய படிப்பு துவங்கியது எனக் கூறலாம். இது ஒரு தொற்றுநோய் என முதலில் கண்டு பிடித்து அறிவித்து, இது சலரோகம் அல்லது நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என முதலில் கூறி, இது மண் அல்லது நீரினால் பரவலாம் என்றுக் கூறிய அறிவியலாளர் இவரே.  இந்நோயின் பரவலைத் தடுப்பதற்கான முறையை உருவாக்கியவரும் இவரேயாவார். முந்தைய காலத்தில் சிகிச்சை முறைகள் பொதுவாக உணவை மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது.


1689 ஆம் ஆண்டில் டாக்டர். ரிச்சர்டு மார்ட்டன் என்பவரினால் நுரையீரலில் ஏற்படும் காசநோய்க்கும் டியூபர்கியூலோசிசுக்கும் இடையிலான தொடர்பு நிறுவப்பட்டு இருந்த போதிலும் இந்நோயின் பல வேறுபட்ட அறிகுறிகளின் காரணமாய், 1820 வரையில், இது ஒரு தனியான நோயென்பது சரியாக அறியப்படாமல் இருந்ததுடன், 1839 இல் J.L.Schönlein என்பவர் குறிப்பிடும்வரை Tuberculosis என பெயரிடப்படாமல் இருந்தது.

[24-03-2026 15:40] Arivu Alagan: மாமத்து  குகையின் உரிமையாளரான முனைவர் சான் குரோகன் என்பவர் 1838 – 1845 ஆண்டுப் பகுதியில், இந்நோயால் தாக்கப்பட்ட சில நோயாளிகளை இக்குகைக்குள் இருக்கும் மாறாத வெப்பநிலையும், சுத்தமான காற்றும் குணப்படுத்தும் என்றெண்ணி கொண்டு வந்து வைத்திருந்த போதும், அவர்கள் ஒரு வருடத்திலேயே இறந்து விட்டனர். இந்நோய்க்கான முதல் சிகிச்சை நிலையம் 1854 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கோபர்சுடோர்பு தற்போது போலந்தில் சோக்கோலோவ்யோக்கோ  என்னுமிடத்தில் ஹெர்மன் பிரேமர்  என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது.



1993இல் உலக சுகாதார அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்நோயின் தீவிரத்திற்கு கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தின் நோக்கமானது, 2015 குள் நோயினால் நிகழக்கூடிய மில்லியன் உயிர் இழப்புகளைத் தடுப்பதாகும். M. டியூபர் குலோசிஸ் வகையினால் நோய் தொற்றிற்கு உட்படக்கூடிய இனம் மனித இனமாக மட்டுமே இருப்பதனால் வீரியமுள்ள ஒரு தடுப்பு மருந்தின் உதவியினால் இந்நோயை முழுமையாகக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதல் சாத்தியம் என்று நம்பப்படுகின்றது. குறைந்தது ஆறு மாதங்கள் வரை முறையான காசநோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும் . இருமும் போதோ அல்லது தும்பும் போதோ கைக்குட்டைகளை பயன்படுத்தி காற்றில் எச்சில் மூலம் பரவாமலும், கண்ட இடங்களில் எச்சில் உமிழாமலும் சூழலைப் பராமரிப்பது அவசியம் ஆகும். தற்போதுள்ள அனைத்து நுண்ணுயிர் கொல்லிகளையும் எதிர்க்கும் திறன் உள்ள பாக்டீரியா கிளை வகை உருவாகி இருப்பது மிகப்பெரும் சிக்கலாகக் காணப்படுகின்றது. இதனால் புதிதாக உருவாகி உள்ள நுண்ணுயிர் வகைக்கு மக்கள் நோய் எதிர்ப்பாற்றலை இழந்து வருவதால் நோயின் வலிமை அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் எங்கும் உள்ள பல அறிவியல் அறிஞர்கள் ஆய்வுகள் மூலம் இதற்கான தீர்வை கண்டுபிடிப்பதில் முனைப்பாக உள்ளனர்.


 உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டு இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 முதல் 90 லட்சம் மக்கள் இத்தொற்றுக்குள்ளாவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய் தாக்கத்திற்கு ஆளாவதாக அறியப்படுகிறது. ஆண்டு தோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. நம் கணித மேதை ராமானுஜம் கூட அயல்நாடுகளில் தம் அறிவுக்கூர்மையால் பணியமர்த்தப்பட்டு, அதனைத் தொடர முடியாமல் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். 1920 இல் அவருடைய 32 வயதிலேயே அவரை நாம் இந்நோய்க்கு பலி கொடுத்திருக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது .


மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ஆம் நாளன்று உலக காசநோய் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் 8.6 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு 1.3 மில்லியன் மக்கள் இறந்துபட்டுள்ளனர். இவர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

காச நோயை ஏற்படுத்தாத வேறு மைக்ரோ பாக்டீரியா இனங்கள் அதிகமாக உள்ள வெப்ப மண்டல நாடுகளில் இயற்கையாகவே காச நோய்க்கு எதிரான ஒரு வகை தடுக்கும் தன்மை நிலவுவதாகவும் கூறப்படுகின்றது. அவ்வகையில் நாம் வரம் பெற்றவர்கள் தானே ? ‌இருப்பினும் வருமுன் காக்க விழிப்புணர்வுடன் இருப்போம்.


(சொ. மங்களேஸ்வரி, பட்டதாரி ஆசிரியை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம்)