நிதீஷ் குமார் நிலை இபிஎஸ்-க்கு வந்து விடக் கூடாது... மாணிக்கம் தாகூர் அக்கறை

Su.tha Arivalagan
Mar 05, 2026,04:45 PM IST

விருதுநகர்: பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி போன்றதொரு நிலை தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படக்கூடாது என்றும், அதற்காக தமிழகத்தில் பாஜக காலூன்றுவதை தடுக்க வேண்டும் என்றும் விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிதீஷ் குமாருக்கு பீகாரில் என்ன நிலைமை ஏற்பட்டதோ, அதேபோன்றதொரு இக்கட்டான நிலை தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். இதற்காகவே தமிழகத்தில் பாஜக காலூன்றக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்," என்று அவர் கூறினார்.


மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் தற்போது பாஜகவிற்கு இருக்கும் நான்கு உறுப்பினர்களும் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லாத ஒரு சட்டமன்றமாக அடுத்த அமையவுள்ள சட்டமன்றம் இருக்க வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.




பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், பின்னர் விலகுவதுமாக இருந்த அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டி, அத்தகைய 'அரசியல் ஸ்திரமற்ற நிலை' தமிழகத்தில் நிலவக்கூடாது என்பதை மாணிக்கம் தாகூர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தற்போது பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து வந்துள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே விசிக கட்சியை சேர்ந்த வன்னி அரசும் இதே போன்ற கருத்தை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


காங்கிரஸ் இல்லாத இந்தியாயை உருவாக்குவதே தங்களின் லட்சியம் என பாஜக தேசிய அளவில் முழக்கத்தை முன் வைத்து, லோக்சபா தேர்தல் துவங்கி, உளள்ளாட்சி தேர்தல் வரை எதிர் கொண்டு வருகிறது. இந்த சமயத்தில் பாஜக இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் சார்பில் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருவது கவனிக்கதக்கது. ஆனால் பாஜக மீதான பயம் காரணமாகவே இவ்வாறான முழக்கங்கள் எழுந்து வருவதாக பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. பீகார் அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவிப்பவர்களை விட அதை உதாரணமாக வைத்து அதிமுக.,வை எச்சரிக்கும் வேலையில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.