நீங்க ஏன் எப்போதும் தனியா இருக்கிறீங்க?.. (மனிதம் மலர்கையில் - 7)
ராமசாமி தாத்தாவின் கடந்த கால ரகசியம்…
மருத்துவமனை அறையில் மாலை ஒளி சாளரத்தால் உள்ளே விழுந்தது.
மீனா அமைதியாக தாத்தாவின் படுக்கையருகில் அமர்ந்திருந்தாள். “தாத்தா… நீங்க ஏன் எப்போதும் தனியா இருக்கிறீங்க?”
அந்த சின்ன கேள்வி, பெரிய நினைவுகளை கிளறியது.
தாத்தா மெதுவாக பேச தொடங்கினார். “எனக்கும் ஒரு குடும்பம் இருந்தது பொண்ணு… ஒரு மகன்… ஒரு மகள்…”
மீனா ஆச்சரியமாக பார்த்தாள்.
“நான் ஒரு பள்ளி ஆசிரியர். என் வாழ்க்கை முழுக்க குழந்தைகளுக்காகவே இருந்தேன். ஆனா என் சொந்த பிள்ளைகளுக்கு நான் நேரம் கொடுக்கலை.
‘பின்னாடி பார்க்கலாம்’ன்னு நினைச்சேன்…” அவரது குரல் சற்றே நடுங்கியது.
"என் மகன் ஒரு நாள் கோபத்தில் வீட்டை விட்டு போனான்.
அவனை தேடினேன்… ஆனா கிடைக்கலை. அதற்குப் பிறகு என் மனைவியும் உடம்பு சரியில்லாமல்… என்னை விட்டு போயிட்டா.”
அறையில் ஒரு கனமான அமைதி.
“அந்த நாள் முதல் தான் புரிஞ்சது மனிதன் பெரிய சாதனை பண்ணினாலும், அவன் அருகிலுள்ள மனசை இழந்தா அது வெறுமைதான்.”
மீனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“தாத்தா… உங்க மகன் திரும்பி வரலையா?”
தாத்தா மெதுவாக தலையசைத்தார்.
“ஒரு கடிதம் மட்டும் வந்தது… பல வருடங்களுக்கு முன்னாடி. அவன் வெளிநாட்டுக்கு போயிருப்பான்னு தெரியும்.
ஆனா இப்போ எங்கேன்னு தெரியாது.”
மீனா சற்று யோசித்தாள். அவளின் மனதில் ஒரு தீப்பொறி.
“தாத்தா… அவங்க திரும்பி வரணும்னு நான் பிரார்த்திக்கிறேன்.”
தாத்தா சிரித்தார்.
“நீ இருக்கே… எனக்கு அது போதும்.”
ஆனால்… மீனாவுக்கு அது போதவில்லை.
அடுத்த நாள், தாத்தாவின் பழைய பொருட்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது,
அந்த பழைய பெட்டிக்குள் மஞ்சள் படிந்த ஒரு கடிதம் கிடைத்தது… அந்த கடிதத்தின் முகவரி
மீனா படிக்கும் அதே நகரம்.
(தொடரும்)
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)