சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

Su.tha Arivalagan
Mar 10, 2026,05:21 PM IST

காங்கேயம் : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் இன்று மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு, அருகம்புல், எலுமிச்சம் பழம் வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளது. இது நாட்டில் எந்த மாதிரியால் தாக்கல் ஏற்படுத்தும் என பக்தர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.


சிவன்மலை சுப்ரமணியர் கோவிலின் தனிச்சிறப்பே மூலஸ்தானம் முன்புள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டி தான். இத வேறு எந்த கோவியிலிலும் இல்லாத தனித்துவமான வழிபாடு முறையாகும். அதாவது, யாராவது ஒருவருடைய பக்தர்களின் கனவில் முருகப் பெருமான் தோன்றி, ஏதாவது ஒரு பொருளை வைத்து வழிபட சொல்லுவார். அந்த பக்தர்கள் உடனடியாக சிவன்மலைக்கு வந்து கோவில் நிர்வாகத்தினரிடம் அந்த செய்தியை சொல்லுவார். அந்த பக்தர்கள் சொல்லுவது உண்மை தானா என்பதை சரி பார்க்க, முருகப் பெருமான் சன்னதி முன்பு உத்தரவு கேட்கப்படும். முருகனிடம் இருந்து உத்தரவு வந்ததும், அந்த பொருளை கருவறைக்கு முன்புள்ள கண்ணாடி பெட்டியில் வைத்து, அதற்கு தினமும் வழிபாடுகள் நடத்தப்படும். மீண்டும் அடுத்த பக்தர் வந்து சொல்லும் வரை முன்பு வைத்த பொருளே அந்த பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும்.


ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் என்ன பொருள் வைக்க சொல்லி உத்தரவு வருகிறதோ, அந்த பொருள் சார்ந்து நாட்டில் அல்லது உலகில் தாக்கங்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. தண்ணீர் வைத்து வழிபட்ட போது சுனாமி வந்ததும், துப்பாக்கி வைத்து வழிபட்ட போது கார்கில் போர் வந்ததும், விளக்கு மற்றும் மண் வைத்து வழிபட சொன்ன போது திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டதும், மஞ்சள் வைத்து வழிபட்ட போது மஞ்சள் விளைச்சல் அமோகமாக நடந்து விவசாயம் செழித்ததாகவும் கடந்த கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதனால் ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் எப்போது, என்ன பொருள் மாற்றப்பட்டாலும் அதை பக்தர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக நினைத்து, உற்று கவனிப்பது வழக்கமாக உள்ளது.




அந்த வகையில் இந்த முறை மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை பழம், அருகம்புல் வைத்து வழிபடும் படி உத்தரவு வந்துள்ளது. மஞ்சள், வெற்றிலை பாக்கு ஆகியவை மிக முக்கியமான மங்கள பொருளாக கருதப்படுபவை. மஞ்சள் பிள்ளையார் வைத்து வழிபட்டால் மங்கள காரியங்களில் இருக்கும் தடைகள் விலகும் என்பது ஆன்மீக நம்பிக்கை. அதே போல் எலுமிச்சை பழம் என்பது தெய்வீக கனியாக கருதப்படும் பழமாகும். அது மட்டுமின்றி விநாயகப் பெருமான் தடைகள், துன்பங்களை போக்கக் கூடியவர். 


இவற்றின் அடிப்படையில் பார்த்தால் நாட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் அதிகம் நடைபெறலாம். நல்லது நடப்பதற்கு இதுவரை இருந்த தடைகள் அகன்று, மக்களின் துன்பங்கள் தீருவதற்கான காலமாக இருக்கலாம். ஆன்மீகம் தொடர்பாக நம்பிக்கைகள், கோவில் விழாக்கள், கும்பாபிஷேகங்கள் ஆகியவை நாட்டில் அதிகம் நடைபெறலாம்.