வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

Su.tha Arivalagan
Jul 26, 2025,05:13 PM IST

சென்னை : மதிமுக பொதுச் செயலாளர் வைகோவால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறி உள்ள மல்லை சத்யா, ஆகஸ்ட் 02ம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார். 


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைகோ மற்றும் மல்லை சத்யா ஆகியோர் கடந்த சில நாட்களாகவே மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். வைகோவிற்கு எதிராக மல்லை சத்யா பல்வேறு மீடியாக்களிலும் பேட்டி அளித்து வந்தால். இதனால் மதிமுக.,வில் ஏற்பட்டுள்ள குழப்பம் தமிழக அரசியலில் மற்றொரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.


என்ன தான் நடந்தது?




மதிமுகவில் வைகோவுக்கு அடுத்தபடியாக, அவரது மகன் துரை வைகோ முதன்மைச் செயலாளராக உள்ளார். மல்லை சத்யா துணைப் பொதுச் செயலாளராக நீண்டகாலம் செயல்பட்டு வருகிறார். வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே ஆரம்பத்தில் மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. மல்லை சத்யா பல சந்தர்ப்பங்களில் வைகோவின் உயிரைக் காப்பாற்றியதாகவும், அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.


இருப்பினும், துரை வைகோ அரசியலுக்கு வந்த பிறகு, துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே ஒருவித ஈகோ மோதல் தொடங்கியது. மல்லை சத்யா துரை வைகோவின் போட்டோ இல்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் துரை வைகோ கோபமடைந்து, மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று வைகோவிடம் வலியுறுத்தியுள்ளார். முதலில் வைகோ இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்திருக்கிறார்.


சமீப காலமாக, இந்த மோதல் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. மதிமுகவில் வாரிசு அரசியல் நடைபெறுவதாக மல்லை சத்யா விமர்சித்துள்ளார். வைகோ குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி ஆரம்பித்தவர் என்றும், தற்போது தனது மகன் துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்கத் தயாராகிவிட்டதாகவும் மல்லை சத்யா குற்றம் சாட்டினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.


வைகோ திட்டவட்டம் :


இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். பலகாலம் மல்லை சத்யா தனக்கு துணையாக இருந்தார் என்பதையும், அதனைப் பெருமையாகக் கூறியதையும் குறிப்பிட்ட வைகோ, அண்மைக் காலமாக அவரது செயல்பாடுகள் சரி இல்லை என்று கூறினார். கட்சியிலிருந்து யார் வெளியேறினாலும் கட்சிக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படாது என்றும், செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் போன்றவர்கள் வெளியேறிய போதும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


உண்ணாவிரதம் அறிவிப்பு : 


இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவால் தான் கடுமையான மனஉளைச்சலில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக மல்லை சத்யா அறிவித்துள்ளார். மன உளைச்சலை ஏற்படுத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 02ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக மல்லை சத்யா அறிவித்துள்ளார். சேப்பாக்கம் சிவானந்தா மாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.