3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதிமுகவுடனான ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டது.
தமிழக அரசியலில் சின்னம் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டுமே ஒரு கூட்டணியின் பலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன. அந்த வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரிடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மதிமுக வரும் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் சின்னம் குறித்த விவகாரம் தான். அதாவது மதிமுகவுக்கான 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் அது திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிடும். ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடும். அந்தத் தொகுதியில் வைகோ போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதிமுக தனது பம்பரம் சின்னத்தை ஏற்கனவே இழந்து விட்டது. கடந்த லோக்சபா தேர்தலில் அது தீப்பெட்டி சின்னத்தில்தான் போட்டியிட்டது என்பது நினைவிருக்கலாம். இந்த முறை திமுக தனது சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியதால் தனிச் சின்னத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொகுதிகள் குறைப்பு
கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை 4 தொகுதிகளையே பெற்றுள்ளது. கடந்த 2021 தேர்தலில் மதிமுகவின் 6 வேட்பாளர்களும் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டனர். ஆனால், ஒரு கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக நீடிக்க வேண்டுமெனில், தனிச் சின்னத்தில் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெற வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டே, இந்த முறை ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் 3 தொகுதிகளில், திமுகவின் நேரடி வாக்கு வங்கி மதிமுக வேட்பாளர்களுக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். இது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் ஒரு பாதுகாப்பான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக 9 தொகுதிகளை மதிமுக கேட்டு வந்ததாக கூறப்பட்டது. ஆனால் கடந்த முறையை விட இந்த முறை 2 தொகுதிகள் குறைத்தே அக்கட்சிக்குக் கிடைத்துள்ளது. வேறு வழியில்லாமல் இதை மதிமுகவும் பெருந்தன்மையாக ஏற்று போட்டியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.