நானும் எழுதினேன்!

Su.tha Arivalagan
Jul 20, 2026,12:55 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


என்னென்னவோ எழுதவில்லை 

எண்ணங்களில் தவழ்ந்ததை எழுதினேன், 


கற்பனையை தீட்டவில்லை 

கடந்த காலத்தை விவரித்தேன்,


விற்பனையாகும் மனிதத்தின் மறைமுகத்தை எடுத்துக் காட்டினேன்,

மாந்தர்களின் முகமூடியின் விரிசலில் கொஞ்சம் எட்டிப் பார்த்தேன்,


பார்ப்பவையெல்லாம் போட்டியும் பொறாமையும் வஞ்சகமுமான குணமென அறிந்தேன்,

அகமொன்று புறமொன்று அழுக்கென அடையாளம் கண்டேன்,


விதியென்று சதியென்று வீதியிலும் வீழ்ந்து கிடக்க வியந்தேன்,

மதி கொண்டு வாழ்வை வெல்ல போராடும் வலி அறிந்தேன்,




விழி திறந்து பார்க்க மனமும் அழ கண்டேன்,

விதவிதமான தகவல்களை நித்தமும் சேகரித்தேன், 


சொற்பதம் கொண்டு சோகமாய் தூரிகையில் வரைந்திட்டேன்,

அரும்பதமாக அவலங்களை அள்ளி தெளித்து விட்டேன், 


குறும்படமாக குடிசையிலும் திரையில்லாமல் ஓட மனம் தளர்ந்தேன், 

பச்சிளம் குழந்தைகளும் பால் குடி மறவாமல் அனாதையாக சிலிர்த்தேன், 


வறுமையின் வட்டத்தில் தேகம் குன்றி போராட கண்டேன், 

கருவறுக்கும் அற்பர்களைக் கண்டு தீப்பிழம்பாய் கொதித்தேன், 


தனியாளாக என்ன செய்யவென எனக்கு நானே நொந்தேன்,

சொல்லியும் தீராத சொல்லில் அடங்காத சோகங்களை கண்ணீராய் வடித்தேன்,,,,