வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!
- ஸ்வர்ணலட்சுமி
மருத்துவகுணம் நிறைந்த வாய்வு, செரிமான கோளாறு போக்கும் பிரண்டை பற்றிய சிறு தகவல்களை இப்போது பார்க்கப் போகிறோம்.
நமக்குத் தெரிந்த பொதுவான பெயர்தான் இந்த பிரண்டை. இதற்கு "வஜ்ஜிரவல்லி " என்ற பெயரும் உண்டு.
"Cissus quadrangularis" என்கிற தாவரவியல் பெயர் கொண்ட இத்தாவரம் கொடிவகையைச் சேர்ந்தது.
பிரண்டை இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக மனித நடமாட்டம் குறைவாக காணப்படும் பற்றை காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது இத்தவாரம். இதன் சாறு உடலில் பட்டால் அரிப்பும், நமைச்சலும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டு பகுதிகளை பெரும்பாலும் மருத்துவத்திற்கு பயன்படுகின்றன.
வகைகள்:
இதில் பல வகைகள் உண்டு. ஆனாலும் நான்கு பட்டைகளை கொண்ட சாதாரண பிரண்டையே அதிகமாக கிடைக்கிறது. சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டு பிரண்டை அல்லது உருண்டை பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப் பிரண்டை களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப் பிரண்டை,ஓலைப் பிரண்டை என பல வகைகளில் உண்டு.
பிரண்டையின் பயன்கள் :
சுளுக்கு,அடிபட்ட வீக்கம், பிடிப்பு,வலி போன்றவற்றுக்கு இந்த பிரண்டை சிறந்த நிவாரணம் தரக்கூடியது. பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கப்பெறுகிறது. இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க செய்கிறது. ஞாபக சக்தியை பெருக்குகிறது. மூளை நரம்புகளை பலப்படுத்துகிறது. எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்துவதுடன்,வாய்வு பிடிப்பை போக்குகிறது. வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வருவதனால் தேகம் வலுப்பெறும், உடல் வனப்பும் பெருகிறது.
எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டை துவையலை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது. இளம் தண்டுடன் புளி உப்பு சேர்த்து அரைத்து நன்றாக காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் பற்று போடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது எலும்பு முறிவு மட்டுமல்லாமல் அடிபட்ட வீக்கம் சுளுக்கு வலி உள்ள இடங்களில் இதை பூசி வர நிவாரணம் கிடைக்கிறது. இதயம் பலப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றிற்கும் இது நல்ல மருந்தாக உதவுகிறது.
மன அழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழந்து விடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு வர செரிமான சக்தியை தூண்டிவிடுகிறது. அஜீரணக் கோளாறுகள் குறைகிறது. மூலத்தால் மல துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்த துவையலை சாப்பிடலாம்.
பிரண்டைத் துவையல்
செய்முறை:
கடாயில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு ஸ்பூன் சேர்த்து,புளி, வர மிளகாய்,தேவைப்பட்டால் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு பிரண்டைத் தண்டுகளுடன் மேல் தோலை அகற்றி அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெயில் அல்லது நெய்யில் நன்றாக வதக்க வேண்டும். மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு :உப்பு,காரம் அவரவர் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
பிரண்டை பற்றிய இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை அடுத்த பதிவில் காண்போம்.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.