பெல்ஜியத்தில் வைத்து சிக்கினார் மெஹுல் சோக்சி.. ரூ. 14,000 கோடி மோசடி செய்த வைர வியாபாரி!

Su.tha Arivalagan
Apr 14, 2025,01:36 PM IST

டெல்லி: இந்தியாவில் ரூ. 14,000 கோடி வங்கிப் பணத்தை மோசடி செய்து விட்டு தப்பித் தலைமறைவாக இருந்து வந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, பெல்ஜியம் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


மெஹுல் சோக்சி, பஞ்சாப் தேசிய வங்கியின் நிதி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர். மும்பை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை காரணமாக தற்போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரும் அவரது சகோதரி மகன் நீரவ் மோடியும் இணைந்து பஞ்சாப் தேசிய வங்கியில் மிகப்பெரும் தொகையை கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்னரே இருவரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். 


இந்தியாவை விட்டு வெளியேறிய சோக்சி, பல்வேறு நாடுகளில் மாறி மாறி தலைமறைவாக இருந்து வந்தார். அவர் இந்தியக் குடியுரிமையை விட்டு விட்டு ஆன்டிகுவா பார்படாஸ் குடியுரிமை பெற்றுக் கொண்டார். ஆன்டிகுவாவில் இருந்தவர் பின்னர் புற்றுநோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து போனார். அங்கிருந்து பெல்ஜியத்துக்குப் போய் விட்டார். ஆனால் அவரது இருப்பிடம் தெரியாமல் இருந்து வந்தது. அவரது மனைவி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் ஆவார். இதையடுத்து அவரை தற்போது பெல்ஜியத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர்.




பெல்ஜியம் நாட்டு காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். தனது உடல் நிலையைக் காரணம் காட்டி சோக்சி ஜாமீனில் வெளியே வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சோக்சி மற்றும் நீரவ் மோடியைக் கைது செய்ய அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட இந்தியாவின் அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் நீண்ட காலமாக காத்துள்ளன. கீதாஞ்சலி ஜெம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர் சோக்சி. அவர் மீது பஞ்சாப் தேசிய வங்கி கிரிமினல் வழக்குத் தொடர்ந்துள்ளது.