இன்று 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை!

Meenakshi
May 26, 2025,06:28 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரையிலும் 16 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தற்போது வெளியாகியுள்ள வானிலை நிலவரப்படி, தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரையிலும் 16 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட12 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.




ஏற்கனவே இன்றைய தினத்தை பொருத்தவரைக்கும் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு நேற்றே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று கன மழை முதல் அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதால், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளுக்கான அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து கோவை, நீலகிரி மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.


இன்று குறித்து நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.


கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.


திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மழை காரணமாக பொதுமக்கள் அவசர தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.