வட்டச்செயலாளருடன் பேசுவது ஒரு தவறா?. அண்ணாமலை கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

Meenakshi
Jun 04, 2025,05:28 PM IST

சென்னை: எனக்கு கீழ் 82 வட்ட செயலாளர்கள் உள்ளனர். ஒரு நாளைக்கு 10,12 வட்ட செயலாளர்கள் செல்போனில் அழைத்து பேசுவார்கள் இதை ஒரு குற்றச்சாட்டாக அண்ணாமலை பேசுவது எதற்கு என்று தெரியவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் தெரிவித்துள்ளார்.


சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வழக்கில் ஞானசேகரன் என்பவருக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், எதிர்கட்சிகள் பலர் யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று   அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், 


அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன.




நாம் கேட்கக்கூடிய கேள்விகள் யார் அந்த சார்? அதே கேள்வியை நாம் திரும்ப கேட்கிறோம். இந்த வழக்கில் கோட்டூர் சண்முகம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டிய நபர். இதை ஏன் முதலமைச்சர் மறைக்கிறார்? டிச.24ம் தேதி பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அங்குதான் யார் அந்த சார்? ஒழிந்திருக்கிறார். நான் எதற்கும் பயப்பட மாட்டேன். நான் இதனை விடமாட்டேன். தொடர்ந்து கேள்விகள் கேட்போன் என்று தெரிவித்திருந்தார்.


இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் இன்றைக்கு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக காவல்துறை, 5 மாத காலத்தில் மிகப்பெரிய அளவிலான தண்டனையை பெற்று தந்து இருக்கிறது. நீதித்துறையே கூட காவல்துறையின் இந்த செயல்பாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டை தெரிவித்துள்ளது. இன்றைக்கு அண்ணாமலை  என் மீது என்ன கூறியிருக்கிறார் என்றால், சண்முகம் என்ற வட்ட செயலாளார் எனக்கு போன் செய்து பேசியுள்ளார் என்று கூறியிருக்கிறார். 


இது எல்லாம் ஒரு குற்றச்சாட்டா?.. எனக்கு கீழே 83 வட்ட செயலாளர்கள் இருக்கின்றார்கள். நான் ஒரு மாவட்ட செயலாளர். என் தலைமையில் இருக்கின்ற நிர்வாகத்தில் 82 வட்ட செயலாளர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளைக்கும் 10 முதல் 15 பேர் எனக்கு போன் செய்து பேசுவார்கள். இந்த தேதி, இந்த நாளில் எனக்கு மாவட்ட செயலாளர் போன் செய்தார். அதனால் என்னை விசாரிக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை. அவருக்காவது இது என்ன குற்றச்சாட்டு என்று தெரியுமா?.. என்று தெரிவித்துள்ளார்.