அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
சென்னை: ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் புதிய அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.
அமைச்சர்கள் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சு மற்றும் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் அவரது ராஜினாமா கடிதங்களை ஆளுநர் ஆர்.என் ரவி ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, புதிய அமைச்சராக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத் துறையும், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், பால்வளத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதிதுறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றுக் கொண்டார். முன்பு பால்வளத்துறை அமைச்சராக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல அவருக்கு மீண்டும் அதே பால்வளத்துறையே ஒதுக்கப்பட்டுள்ளது.