பாஜக.வின் புதிய மசோதாவால் தமிழ்நாட்டு அமைச்சர்கள் பதவிக்கு ஆபத்து வருமா?
டில்லி : முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் விதத்தில் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவால் யாருக்கெல்லாம் ஆபத்து வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வரும் இந்த புதிய சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் பாஜக.,விற்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த சட்ட மசோதாக்கள் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அப்படி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனால் தமிழக அமைச்சர்கள் பலரின் பதவிக்கு ஆபத்து வரும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே கைது செய்யப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்துள்ளார். தற்போதும் அவர் ஜாமினில் தான் வெளியில் இருந்து வருகிறார். அவர் மீதான பண மோசடி வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. அதே போல் அமைச்சர் கே.என்.நேருவும் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யும் நிலைக்கு சென்றார். ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்று, கைதுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இருந்தும் அவர் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. திமுக எம்.பி.,க்களான கனிமொழி, ஆ.ராசா மீதான 2ஜி வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது.
அதை விட முக்கியமாக சனாதன தர்மம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோர்ட் அனுமதி இல்லாமல் உதயநிதி மீது புதிய எஃப்ஐஆர் எதுவும் போடக் கூடாது என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அவர் மீது ஏற்கனவே போட்டப்பட்ட வழக்குகளில் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என சொல்லவில்லை. இதனால் இந்த வழக்குகளும் உதயநிதிக்கு எதிராக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இதே போல் பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலும் குற்ற பின்னணி கொண்ட முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை பலரும் இருக்கிறார்கள். இதனால் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை போல், இந்த சட்டத்தை தேர்தல் சமயத்தில் பாஜக, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக பயன்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளை மட்டும் குறி வைத்து இந்த சட்டத்தைப் பயன்படுத்தினால் அது பாஜகவுக்கு எதிராகவும் திரும்ப வாய்ப்புள்ளதால் இந்த சட்டத்தை எப்படி மத்திய அரசு பயன்படுத்தப் போகிறது என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.