குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

Meenakshi
Jun 10, 2025,03:34 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்னர் பாஜக தங்கள் முதுகைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


சென்னை  திமுக கொரட்டூரில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், 




தமிழ்நாடு அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓயவில்லை. உத்திரபிரதேசத்திலும் இன்னும் இயல்புநிலைக்கு அந்த மாநிலம் திரும்பவில்லை. மணிப்பூர் கலவரத்தை மறைக்கவே கொங்கு மண்டலம் கொலைகள் குறித்து பாஜக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.


ஆனால், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இருக்கிறார். எந்தவித குற்றச்சாட்டுகள் புகார்கள் என்றாலும் அவர் நேரடியாக முன் நின்று தீர்த்து வைக்கிறார். அதனால் தமிழ்நாட்டின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்னர் பாஜக தங்கள் முதுகை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.