ஆர்பிஐ விதிமுறைகளை திரும்பப் பெறுக.. அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்..!

Manjula Devi
May 22, 2025,12:42 PM IST

சென்னை: தங்க நகை மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் தரப்படும் உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் 9 புதிய விதிகள் ஏழை மக்களை நேரடியாக பாதிக்கும். இத்தகைய கட்டுப்பாடுகளை ஆர்பிஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.



சமீபத்தில் ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்குதல், அடமானம் வைக்கப்படும் நகைக்கு உரிய ஆவணம் சமர்ப்பித்தல், அடகு வைக்கப்படும் நகைகள் 22 கேரட் தங்கத்தின் விலையிலேயே மதிப்பிடப்படும் உள்ளிட்ட 9 விதிமுறைகளை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஆர்பிஐ அறிவித்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சாமானிய மக்களை நேரடியாக  பாதிக்கும் ஆர்பிஐ கட்டுப்பாடுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,




தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. 


ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.


அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என கூறியுள்ளார்.