Madurai Meenakshi: மாணிக்க மூக்குத்தி.. மதுரை மீனாட்சிக்குக் கல்யாணம்!

Su.tha Arivalagan
Apr 27, 2026,02:56 PM IST

- எம்.கே. திருப்பதி


யாகத்தீயில் உதித்த 

யோகத் தீ!

போரில் புல்லரை

புறங்கண்ட புரட்சித் தீ!

 

முகிழ்ந்தது அவள் 

மூன்று கொங்கையுடன்!


மூன்றில் ஒன்று 

முடிவுக்கு வந்தது

முக்கண்ணன் கண்டவுடன்! 


உடனே உலகம்மை 

கயிலாய நாதனை 

கணவனாய் எண்ணினாள்!

மாநகர் மதுரையில் 

மணம் முடிக்க நண்ணினாள்!




அவ்விழா 

சைவமும் வைணவமும் 

சகோதரர்கள் என

சாற்றும் விழா!  


மல்லிகை நகரின் 

மக்கள் வெள்ளத்தில் 

காயப்பட்டுப் போகும் 

காண்போர் விலா!


கல்யாணம் காண 

காத்துக்கிடக்கும்

கவின்மிகு நிலா!


ஒருநாள் அது  

ஓய்வில் இருக்கும்

போகாது உலா!


பச்சைப் பட்டுடுத்தி 

பார்வதி வருவாள் 

பளிங்குச் சிலைபோல்!

பார்ப்பவர் பரவசம்

பறவை அலைபோல்!


திருப்பரங்குன்ற

திருத்தளத்தில் 

பெருமாள் தாரைவாக்க 

பெருமாட்டி நாணம் வார்க்க...

சேயோன் சிரித்துப் பார்க்க 

சொக்கநாதன் சொக்கி நிற்க.....


விண்ணதிர அரங்கேறும் 

விவாக வைபவம்!

விழுந்து விழுந்து நோக்கும் 

வியப்பில் வையகம்!


அடுத்தடுத்த

ஆன்மீக நிகழ்வுகளில் 

மதுரைத் தெருக்கள் 

மணக்கோலம் பூணும்!


மங்கள ஆடைகள் 

மாட்டிக் கொள்ளும் 

மனைகளின் தூணும்!


மாசி வீதி 

தூசி வீதியாகும்!

வைகை ஆறு

வயிறு நிரம்பிப் போகும்!


கூடுங்கள் அனைவரும் 

கூடல் நகரில்!

வாங்குங்கள்  அனைவரும் 

வாழ்வின் அருளை!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)