ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!

Su.tha Arivalagan
May 06, 2026,11:00 AM IST

- எம்.கே.திருப்பதி


ராஜஸ்தான் பாலைவனத்திலிருந்து 

புறப்பட்ட தமிழ் நீர்!


உதவாது என ஒதுக்கிய 

உதவி இயக்குநர்களின் 

உமிழ் நீர்!


தொன்னூறுகளின் தொடக்கம் 

ஏகப்பட்ட

எண் நூறுகளின் அடக்கம்!


அதாவது

பாதிக்குப் பாதி படங்கள்

நாட்கள்

நூறுக்கு மேல் தாண்டும்!


படக் கொட்டகைகள் 

பரபரக்கும் யாண்டும்! 




அதில் அன்னாரின் பங்கு 

அளவிட ஒன்னாது!

எழுச்சியும் ஏற்றமும் இன்றி

ஏந்தல் இதயம் 

எதுவும் எண்ணாது!


இசை முதல் 

இயக்குனர் வரை

இப்படி 

இம்சையில் இருந்தோரை...

இமய மிசை ஏற்றினார்!


மடுவாய் இருந்தோரை

மலையாய் மாற்றினார்!


புதுவசந்தம் 

புத்துணர்ச்சியின் புதுமை!

சேரன் பாண்டியன்

சிந்தை அள்ளிய பதுமை!


நாட்டாமை என்றாலே

நாக்கு இனிக்கும்!

பூவே உனக்காக

பூவாய் மணக்கும்!


துள்ளாத மனமும் துள்ளும்

தலைப்பே நமது

உள்ளம்  அள்ளும்!


இருக்கிறது இன்னும்

இனிய வரிசை

இயம்பிக் கொண்டே

இருக்கலாம்

இதயத்தின் பரிசை!


சவுத்ரித் தங்கம் -  ஒரு

சாலை விபத்தில்

சவமாகிக் போனார் 

சாமியோடு சாமியாய் 

சமமாகிக் போனார்!


என்னை இப்போதும்

எப்போதும்

ரசிக்க வைத்த ரசவாதி 

ரணமாகிப் போனார்!


நாட்டாமை நாயகனின் 

நல்லடக்கத்தில்

நானும் கலக்கிறேன்...

மனமகிழ்ச்சி ஊட்டிய 

மனிதனுக்கு

அடி நெஞ்சிலிருந்து 

கவிபாடி நிறைக்கிறேன்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)