பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

Su.tha Arivalagan
Sep 14, 2026,12:55 PM IST

 - உணர்வேற்றுக் கவிஞர் எம்.கே.திருப்பதி, திருப்பூர்


சாலமன் பாப்பையா -  ஒரு

சமூக அடையாளம்!


பட்டிமன்றத்தை

பட்டி தொட்டியெங்கும் 

பயணிக்க வைத்த 

பண்பாட்டுத் தமிழன்!


சிரித்த முகத்தோடு

சீரிய குணத்தோடு 

களமாடும் கருத்தாழன்!


ஆடையின் வெள்ளை போல் 

அவர் மேடையில்

அப்பழுக்கற்ற 

தீர்ப்பிருக்கும்!




ஒன்பது பத்து 

என்பது அவருக்கு

பொருட்டேயல்ல!


எண்பதுகளும்

ஒன்பதுகளும் 

இடைநிற்கும் 

இளசுகளும் - இப்படி

எல்லாவற்றுக்குமான

ரசனை அவர்!


சாலமன் சொல்லின்

சுருக்குப் பையில் 

சிக்கிக் கொண்டவர் ஏராளம்!


அரங்கங்களை 

அதிரவிட்ட ஆளரி

இன்று

ஊமையாகிப் போனது!


மௌனித்தது

உடலம்தான்!

உள்ளம் இன்னும் 

உயிரோடுதான்!


தமிழை 

தலைமேல் தாங்கிய 

தங்கங்களில்

பாப்பையாவும் ஒருவர்!


சுப்பையா 

பாப்பையா

இருவரும்

இன் தமிழ் 

தோப்பையா!


இனி இந்நாளில் 

இரண்டு அஞ்சலிகள்

இயம்புகிறோம்!


தமிழ்ப் பூக்களுக்கு 

தரைப் பூக்களால் 

தாள் நனைக்கிறோம்! 


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)