முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்தார்.. மநீம தலைவர் கமலஹாசன்.. என்ன விசேஷம்?
சென்னை: முதல்வர் மு. க ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் திடீரென சந்தித்து பேசினார். அப்போது ஆளுநருக்கு எதிரான தீர்ப்பிற்கும், வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர்
மு.க ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணியில், மாநிலங்களவை பதவிக்கான விவாதமாக இருக்குமோ என பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலினை, கமலஹாசன் சந்தித்த போது, வக்பு சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும், ஆளுநருக்கு எதிரான தீர்ப்பிற்காவும் கமலஹாசன் நன்றி தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கமலஹாசன் கூறுகையில்,
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக முதலமைச்சரை நான் சந்திக்கவில்லை. கட்சியில் ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்தால் அப்போது நன்றி கூற நான் வருவேன். இப்போது நான் வந்தது நன்றி சொல்ல வரவில்லை. கொண்டாட வந்திருக்கிறேன். ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு நமக்கு சாதகமாக என்று சொல்வதை விட இந்தியாவுக்கே சாதகமானது.
இந்த தீர்ப்பு முதல்வர் போட்ட வழக்கின் காரணமாக வந்திருக்கிறது. கொண்டாடப்பட வேண்டியவர்கள் இவர்கள். அதனால் அந்த கொண்டாட்டத்திற்காக தான் நான் வந்திருக்கிறேன். அதில் என்ன உதவி செய்ய வேண்டும் என்றாலும் தேசிய அளவில் இந்த வெற்றியை மற்றவர்களுக்கும் உதவும் படி கொண்டாட வேண்டும் என்பதை அவரிடம் தெரிவிக்க வந்திருக்கிறேன் எனக் கூறினார்.