தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!

Su.tha Arivalagan
Mar 15, 2026,03:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அதை கண்காணிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


பொதுவான தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன என்று பார்ப்போம்:


வெறுப்புப் பேச்சுத் தடை: சாதி, மதம் அல்லது மொழி அடிப்படையில் மக்களிடையே பகையைத் தூண்டும் வகையிலான எந்தவொரு செயலிலும் கட்சிகள் ஈடுபடக்கூடாது.


விமர்சனம்: மாற்றுக் கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களின் கொள்கைகள் மற்றும் கடந்த கால பணிகளை மட்டுமே விமர்சிக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்.




வழிபாட்டுத் தலங்கள்: கோயில், மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது.


பணம், மது தர தடை: வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, மது விநியோகம் செய்வது அல்லது அவர்களை மிரட்டுவது போன்ற செயல்கள் கடுமையான குற்றமாகும்.


முன் அனுமதி: பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் இடம் மற்றும் நேரம் குறித்து உள்ளூர் காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.


தடைகள்: குறிப்பிட்ட பகுதியில் ஏதேனும் தடை உத்தரவுகள் (Section 144) அமலில் இருந்தால், அவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.


போக்குவரத்து ஒழுங்கு: ஊர்வலங்களின் போது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கக்கூடாது. பிற கட்சிகளின் உருவ பொம்மைகளை எரிக்க அனுமதி இல்லை.


அடையாள அட்டை: வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாளச் சீட்டுகள் வெற்று காகிதத்தில் இருக்க வேண்டும்; அதில் கட்சியின் சின்னமோ அல்லது வேட்பாளர் பெயரோ இருக்கக்கூடாது.


கட்டுப்பாடுகள்: வாக்குச் சாவடியைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது. தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிக்கு அருகே தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும்.


உணவு வழங்க தடை: வேட்பாளர்களின் முகாம்களில் வாக்காளர்களுக்கு உணவு அல்லது பானங்கள் வழங்கக் கூடாது.


அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க ஆளும் கட்சிக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம்.


புதிய திட்டங்கள்: தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அமைச்சர்கள் எந்தவொரு புதிய திட்டத்தையும் அறிவிக்கவோ, அடிக்கல் நாட்டவோ கூடாது.


அரசு இயந்திரம்: அரசு வாகனங்கள், விமானங்கள் மற்றும் அரசு இயந்திரங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது.


விளம்பரங்கள்: பொதுமக்களின் வரிப்பணத்தில் அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் சுவரொட்டிகள் அல்லது விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது.


விருந்தினர் மாளிகைகள்: அரசு விருந்தினர் மாளிகைகளை ஆளும் கட்சியினர் மட்டும் ஏகபோகமாகப் பயன்படுத்தக் கூடாது; மற்ற வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.


தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, சமூக ஊடகங்களிலும் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான வீடியோக்கள் அல்லது ஆடியோக்களைப் பயன்படுத்தி மாற்றுக் கட்சியினரைத் தரம் தாழ்த்தக் கூடாது.


இதுதவிர மேலும் பல கட்டுப்பாடுகள் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் விதிக்கப்படும். பொதுமக்களும் கூட பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.