முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
டெல்லி: ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணியில் மூத்த பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் இன்று இலங்கையில் தொடங்குகிறது. 20 நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்கவுள்ளன. இந்த நிலையில் இந்திய அணியில் ஒரு மாற்றம் நடந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நவி மும்பையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் பந்து வீசும்போது ஹர்ஷித் ரானா காயமடைந்தார். பிசிசிஐ மருத்துவக் குழுவின் பரிசோதனைக்குப் பிறகு, அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலுடன், முகமது சிராஜ் இந்திய அணியில் மாற்று வீரராக இணைந்துள்ளார். 111-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சிராஜ், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை மேலும் வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்ஷித் ரானாவின் காயம் கவலையளிப்பதாகத் தெரிவித்தார். அணியின் சமநிலைக்கு ரானா அவசியமானவர் என்றாலும், போதிய மாற்று வீரர்கள் அணியில் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி, பிப்ரவரி 7-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்காவிற்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.