Monday Thoughts: "தி.மு... தி..பி".. புதிய உறவால் உதயமாகும் பெயர் மாற்றங்கள்!
- முனைவர் தி. தங்கலட்சுமி
21 ஆம் நூற்றாண்டின் கால் பங்கைக் கடந்துவிட்டோம். இன்றும் நமது இந்தியப் பண்பாட்டில் குடும்ப அமைப்புகள் இன்னும் பரஸ்பரம் அன்பால் பிணைக்கப்பட்டே காணப்படுகின்றன என்பது ஆறுதலான விஷயமே எனலாம்.
நமது தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் காலங்காலமாக நேர்ந்து வந்துள்ள திருமணம் மற்றும் குடும்ப அமைப்பு முறையின் மாற்றங்களைப் பற்றி இன்று கொஞ்சம் சிந்திக்கலாமா?!
பொதுவாக நமது சமூகக் கட்டமைப்பில் பிள்ளைகளின் பெயருக்கு முன் தலைப்பெழுத்தாக தந்தையின் பெயரின் முதல் எழுத்தைப் போடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. கால மாற்றங்களாலும் சமூக மாற்றங்களாலும் முன்பு
அரிதாக இருந்த பழக்கம், தாயாரின் பெயரின் முதல் எழுத்தைத் தலைப்பெழுத்தாகப் போடுவது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மை பெற்றோரே, தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது தந்தை, தாய் இருவரது பெயரின் முதல் எழுத்தை, பிள்ளைகளின் பெயரின் முன் இரு தலைப்பெழுத்தாய் இடும் பழக்கத்தைப்
பரவலாகக் காணமுடிகிறது.
திருமணம் என்ற பந்தத்தில் இணையும்போது, காலங்காலமாக.... நமது சமூக நடைமுறையில் காணப்படும் ஒரு எழுதாத சட்டமாக, மணப்பெண்ணின் பெயரின் பின்னால், மணமகனின் பெயரையும் இணைத்துக் கொள்வதில் அனைத்துப் பெண்களும் பெருமிதமே கொள்கின்றனர்.
மிஸ் என்ற முன்னடைச்சொல் மாறி மிஸ்ஸஸ் என்ற முன் அடையும் பெயரின் பின் கணவர் பெயரையும் சேர்த்துச் சொல்வதிலும் சொல்லக் கேட்பதிலும் பெண்கள் பெருமையே அடைகின்றனர்.
ஆனால், இந்த ஆண்களில் யாரேனும் இதுபோல் தங்கள் திருமணத்திற்குப் பின்பாக, தங்களை அறிமுகப்படுத்தும்போதோ, அல்லது அடையாளப்படுத்தும்போதோ திரு. தனது பெயர் உடன் மனைவியின் பெயரையும் இணைத்துச் சொல்லும் நிலையைக் காண முடிவது இல்லையே! அது ஏன்???
பெண்களே! இன்றைய நவயுகத்தின் பெண்ணியம் பேசும் உன்னதப் பெண்களே! இன்று கணவரைப் பெயர் சொல்லி அழைப்பதும், ஒருமையில் விளிப்பதும் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. சம உரிமை பேசி சமதர்மம் கோரி, வீட்டு வேலைகளில் பெரும்பான்மையை ஆண்களையும் செய்ய வைத்தும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்!
ஆனாலும், இந்த மாற்றத்தை உங்கள் கணவரிடத்தில் உங்களால் கொண்டு வர முடியுமா? கணவரின் பெயரின் பின்னால் உங்கள் பெயரையும் இணைத்து எழுதுவது, அல்லது சொல்வது போன்று செய்ய வைக்க இயலுமா??
இதற்கு ஆண்கள் சமூகமே பதிலளிக்க வேண்டும்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக எங்கேனும் ஓர் சிறந்த ஆண்மகன்கள் தங்களின் பெயரின் பின்னால் தன் மனைவியின் பெயரையும் சேர்த்துச் சொல்லும் அல்லது கையொப்பமிடும் வழக்கம் கொண்டு இருக்கலாம். பெரும்பான்மை ஆண்கள் அவ்வாறு செய்யத் தயங்குவது ஏனோ??? அல்லது செய்யாததன் காரணம் என்னவோ???
மாற்றத்தைக் கொண்டு வரலாமே... புதியதோர் பழக்கத்தை வழக்கமாக மாற்றினால் எவ்வாறு இருக்கும்...!
இக்கட்டுரையை வாசிக்கும் அன்பர்கள் அனைவரின் கருத்தினையும் அறிந்து கொள்ள ஆவல்.
கருத்துப்பெட்டியில் அவசியம் கருத்துரையுங்கள்.
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).