மும்பையில் மோனோ ரயில் சேவை நிறுத்தம்.. மக்கள் தவிப்பு ..அடுத்தடுத்து ரிப்பேர் ஆனதால் நடவடிக்கை

Su.tha Arivalagan
Sep 20, 2025,04:38 PM IST

மும்பை: மும்பையில்,  செம்பூரிலிருந்து, சாத் ரஸ்தா வரையிலான மோனோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. 


செப்டம்பர் 20, 2025 முதல் இரண்டு மாதங்களுக்கு இந்த சேவை இருக்காது. புதிய ரயில்கள், மேம்படுத்தப்பட்ட சிக்னல் அமைப்பு மற்றும் தற்போதுள்ள ரயில்களை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்ய இந்த முடிவை எடுத்துள்ளது மோனோரயில் நிறுவனம்.


செம்பூரிலிருந்து சாத் ரஸ்தா வரை செல்லும் 19.54 கி.மீ தூர மோனோ ரயில் நிறுத்தப்படுவதால் மக்களுக்குச் சிரமம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


கடந்த ஒரு மாதத்தில் பல தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சமீபத்திய தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, மோனோரயில், அமைப்பை முழுமையாக மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் ஏழு முறை சேவை தடைபட்டது. ஆகஸ்ட் 19 அன்று பெய்த கனமழையின்போது, மைசூர் காலனி மற்றும் ஆன்டோப் ஹில்லில் இரண்டு ரயில்கள் பழுதாகி நின்றன. இதனால் 1,148 பயணிகள் சிக்கிக்கொண்டனர். செப்டம்பர் 15 அன்று பெய்த மழையில் 17 பயணிகள் வளைவான பாதையில் சிக்கிக்கொண்டனர்.


என்னென்ன மேம்பாடுகள் செய்யப்பட உள்ளன? 




மேம்பட்ட சிக்னல் தொழில்நுட்பம் நிறுவப்படும். இது ரயில்கள் பழுதாகி நிற்பதை குறைக்கும். மேலும், அமைப்பை சிறப்பாக கண்காணிக்க உதவும். புதிய ரயில்கள் சேர்க்கப்படும். இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய ரயில்கள் முழுமையாக சரி செய்யப்படும். குறிப்பாக மழைக்காலங்களில் ரயில்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்க இது உதவும்.


இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது நவம்பர் மாத மத்தியில் monorail சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.