கரூரில் விபரீதம்.. விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் மரணம்.. அமைச்சர்கள் விரைந்தனர்
கரூர்: கரூரில் இன்று இரவு நடந்த விஜய் கூட்டத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள் உள்பட 36 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
கரூரில் இன்று விஜய் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். விஜய்யே இந்த இடத்துக்கு வர முடியாத அளவுக்கு கூட்டம் நெட்டித் தள்ளியது. காவல்துறையினரின் உதவியுடன்தான் தான் கூட்ட இடத்தை அடைய முடிந்ததாக விஜய்யே கூறினார். அந்த அளவுக்கு மிகப் பெரிய கூட்டம் கூடியிருந்தது.
இப்படிக் கூட்டம் கூடியிருக்கிறதே எல்லோரும் பத்திரமாக திரும்ப வேண்டுமே என்றுதான் இதைப் பார்த்த பலரும் நினைத்தனர். ஆனால் இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. விஜய் பேசி முடித்த அடுத்த சில நிமிடங்களில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இப்போது காயமடைந்த பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் விரைந்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, , மாண்புமிகு அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் அவர்களை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன்.
மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ்
கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும். கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்; காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.