அமெரிக்காவை அதிர வைக்கும் Bomb Cyclone.. பல ஊர்களை பனி மூடியது!
- சரளா ராம்பாபு
வாஷிங்டன்: அமெரிக்காவை அதிர வைத்து வருகிறது பாம்ப் சைக்ளோன் எனப்படும் பனிப் புயல். ஒரே வாரத்தில் வந்துள்ள 3வது பனிப் புயல் இது என்பதால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
அமெரிக்காவின் ஒரு பகுதியை இந்த பனிப் புயல் மூடியுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஆன காலம் கடும் குளிர் காலம் ஆகும். இச்சமயத்தில் அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களான மாசசூசெட்ஸ், பென்சில்வேனியா, மைனே போன்ற மாகாணங்கள் கடும் புயலில் சிக்கிக் கொள்ளும். இங்கு வெப்பநிலை -10 டிகிரி முதல் -25 டிகிரி செல்சியஸ் வரை சரியும்.
தற்போது அமெரிக்காவின் 33% பரப்பை பனிப்புயல் தாக்கி பனியால் மூடியுள்ளது. கொலராடோ மாகாணத்தில் உள்ள ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரம் வரை பணி நிரம்பி உள்ளதாக தேசிய வானிலை சேவை மையம் தெரிவிக்கிறது. நகரின் பல இடங்களில் பனி படர்ந்ததன் காரணத்தால், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சந்திப்புகளில் பல விபத்துகள் நேர்ந்துள்ளது. வாகன ஓட்டுகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டுமென அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காற்றின் அழுத்தம் 24 மணி நேரத்தில் 24 மில்லி பார் அளவிற்கு காற்றழுத்தம் குறைந்தால் அது அதிதீவிர புயலான பாம்ப் சைக்ளோன் என்று கருதப்படும். மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் முதலியவற்றை சேமிப்பில் வைத்திருக்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
நமக்கெல்லாம் தண்ணீரால் கண்டம் என்பது போல அமெரிக்கர்களுக்கு பனியும், டோர்னடோ எனப்படும் சூறாவளியும்தான் எப்போதும் சவாலாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
(சரளா ராம்பாபு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)