தாய் தரும் அமுதம் (தாய்ப்பால் வாரக் கவிதை)

Su.tha Arivalagan
Aug 11, 2026,12:56 PM IST

- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி


தாய்ப்பாலே உயிரின் முதல் அமுதம்!


தாயின் நெஞ்சில் சுரக்கும் அமுதம்,

சேயின் ஆயுள் வளர்க்கும் அமுதம்!


கருவில் வளர்ந்த உயிர்க்கு இங்கே,

கடவுள் கொடுத்த முதல் அமுதம்!


வார்த்தை அறியாச் சிறு உயிரின்,

பசியைப் போக்கும் பேரமுதம்!


நோய்கள் தீர்க்கும் கேடயமாய்,

பிள்ளையைக் காக்கும் அமுதமிது!


விலைமதிக்க முடியாத பொக்கிஷமிது,

விண்ணவர் வியக்கும் அமுதமிது!




தாய் அன்பின்  திரவம் இது,

தன் நிகரில்லா மருந்தும் இது.!


தாயின் உயிரின் துளியிதுவே,

சேயின் எதிர்காலப் பலமிதுவே!


குருதி உருகிப் பாலாகி,

குழந்தை வயிறை நிறைத்திடுமே!


அன்பின் ஊற்றாய் பெருகிடுமே,

அகிலம் போற்றும் தாய்ப்பாலே!


இன்று பூமியில்  நீ சுவைத்த அமுதமெல்லாம்,

அன்று நீ சுவைத்த தாய்ப்பாலுக்கு ஈடாமோ!


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)