Motivational Monday: நிச்சயத் தீர்ப்புகள்.. மௌனம் காவாதீர்; பதில் பகருங்கள்!

Su.tha Arivalagan
Aug 31, 2026,03:12 PM IST

- முனைவர் தி.தங்கலட்சுமி


நடை பயின்ற காற்றுக்குத் 

தடை நேர்ந்ததேனோ?


வான்வெளியில் பரந்து திரிந்த

வளிக்கு வந்த வலியென்னவோ?


அதிர்ச்சியில் உறைந்து போன மரங்கள் 

இயற்கையின் மௌனாஞ்சலியோ?


இதமளித்த தென்றலுக்குத் திடீர் 

இருதயக் கோளாறோ?

அல்லது நுரையீரல் பழுதோ?


நின்றுவிட்ட தென்றலுக்கு

நிசப்தமான தூது..




இயற்கையின் நூதனப் போராட்டம்

காற்றின் மௌனப் புரட்சி...


திருந்திடு! மனிதா திருந்திடு! 

காற்றை மாசுபடுத்தாது விட்டுவிடு!


இல்லையெனில் பின்விளைவை அனுபவிப்பாய்!


கந்தர்வ காட்டிலே எரியுண்ட மரங்கள்

நிலக்கரியாய் உருமாறிய மரங்கள்

அந்நிலக்கரி கொண்டே

மானிட சட்டைகளை 

இஸ்திரி போட்டிடும் - சூரியன்!


ஓ எமபாதக மானிடா! 

காற்று மங்கையை நீ 

மாசுபடுத்திய குற்றத்திற்கு 

வான்மழையைக் கொட்டித் 

தீர்த்தே அவள் சோதரன்

பழி தீர்க்கின்றான்!


தெற்கிலே காற்று மங்கையின் 

மௌனப் புரட்சி!

வடக்கிலே அவள் சோதரன் 

நிகழ்த்தும் பழி தீர்க்கும் படலம்!


நசிந்த பூமியில் 

புழுவென நெளியும் மானிடா!


இறைவன் படைத்தளித்த

இன்சுவைக் கனியெனத்

திகழ்ந்த பூமியின்

கனிமவளம் அத்தனையும் 

உறிஞ்சி உறிஞ்சி 

வண்டு புகுந்த மாங்கனியாய் 

பு(வ)சிப்பதற்கு உபயோகமற்ற

அழுகல் கனியாய் மாற்றி 

வீணாக்கிய வீணனே!


ஒரு பொருளை ஒருமுறை 

மாத்திரம் உபயோகித்துத் 

தூக்கியெறியும் உன் நுகர் 

கலாச்சாரத்தை எம் பூமித்தாயிலும் 

பிரயோகித்துவிட்டாயே? கயவனே!


இப்பொழுது நன்றாக அனுபவி...

நீ செய்த பாவங்களுக்குத்

தண்டனையை இங்கேயே இப்போதே!


வீடு தேடி வரும் இலவச சேவைபோல்

உன் குற்றங்களுக்குத் தண்டனை 

உன்னைத் தேடி ஓடி வருகின்றது

பொங்கி வரும் புதுவெள்ளமாய்!


நீதியின் முன் அனைவரும் சமமென

இந்திய அரசாங்கம் கூறும்; ஆனால்

நாட்டின் நடைமுறையோ வேறு!


இயற்கையின் நீதிமன்றத்தில்

ஏழை பணக்காரன் என்ற 

பாரபட்சம் ஏதும் கிடையாது...

ஆண்டவன் தீர்ப்பு அனைவருக்கும் சமமே!


வெள்ளத்தால் துயருருவோரில் 

ஏற்றத்தாழ்வில்லை காண்!


ஆனால் இது அநியாயம்

அக்கிரமம் என ஏழை ஒருவன்

கூக்குரலிட்டு இறைவனிடம் 

முறையிட்டான்!


ஐயனே! அடியேனோ ஏழை;

என்னிடம் வண்டிவாகனம் 

ஏதுமில்லை; பின் நான் எவ்வாறு

குற்றமிழைத்தோர் பட்டியலில்

இடம்பெற்றேன்? இது முறையா?

இதை நான் வன்மையாக 

ஆட்சேபிக்கின்றேன் ஆண்டவனே?


மௌனம் காவாதீர்; பதில் பகருங்கள்...


இறைவன் மோகனப் புன்னகையுடன்

மௌனமாய் மழை பொழிந்து 

விடையிருத்தார்...!!!


மழை வெள்ளத்தில் 

ஏழை பணக்காரன் எனும் 

பேதம் (தகர்ந்தது) தகர்த்தேன்!


குற்றம் புரிந்தவரை விட 

குற்றத்தைத் தூண்டியவரும் 

துணை போனவருமே 

தண்டனைக்கு...

இலக்காவர் எனும் உன் நாட்டு

நீதி கூறும் அதே விதிதான்

இவ்வழக்கிலும் கையாளப்பட்டுள்ளது

வீணே கிடந்து கதறாதே!


"இனியேனும் மிஞ்சி இருப்போர்

எஞ்சியிருக்கும் கனியதனை 

நன்முறையில் பராமரிப்பீராக!" -

என திருந்திட மீண்டுமோர் 

எச்சரிக்கையுடன் தீர்ப்பு வாசித்தான் 

இயற்கை எனும் நீதிதேவன்!


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).