மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!

Su.tha Arivalagan
Aug 19, 2025,01:07 PM IST

மும்பை: மும்பை மற்றும் நகரின் பல பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் கன மழையால் நகர் முழுவதும் பல இடங்களில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மும்பை - புனே சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நவி மும்பையில்தான் அதிக அளவிலான மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மும்பை, நவி மும்பை உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழை, சராசரியாக 100 மிமீ-க்கு மேல் பதிவாகி, நகரையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. நவி மும்பையில் உள்ள வாஷி பகுதியில்தான் மிகவும் அதிக மழைப்பொழிவை பதிவு செய்துள்ளது. 


தொடர் கன மழை காரணமாக, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபாயகரமான வானிலை நிலவுவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி நவி மும்பை மாநகராட்சி (NMMC) திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.




தொடர் கன மழையால் வாஷி, டர்பே, மற்றும் சான்பாடா போன்ற தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திங்கள் அதிகாலையில் இருந்து நவி மும்பையில் பல சாலைகள் நீரில் மூழ்கியதால், இரு சக்கர வாகனங்களும் மற்ற வாகனங்களும் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்ல முடியாமல் திணறின. இதனால் சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் உடைந்தும் விழுந்ததால், பயணிகளின் இன்னல்கள் மேலும் அதிகரித்தன. 


தாழ்வான பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால், வெள்ளம் மேலும் தீவிரமடைந்து, பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் செல்ல சிரமமாக இருந்தது. சாலைகளில் உள்ள பெரிய பள்ளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், போக்குவரத்து மெதுவாகவும், விபத்து அபாயம் அதிகரித்தும் காணப்பட்டது.


மழை நிலவரம் குறித்து மாநகராட்சி ஆணையர் கைலாஸ் ஷிண்டே கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியான கனமழை பெய்து வந்தபோதிலும், எங்கள் குழுக்கள் முழுமையாகத் தயாராக உள்ளன. மேலும், இரவு பகலாக பணியாற்றி வருகின்றன. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அமைதியாக இருக்குமாறும், ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக நவி மும்பை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை மையங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.


நவி மும்பை கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டாலும், அண்டை மாவட்டமான பன்வேலும் வெள்ளத்தால் திணறியது. கலம்போலியில், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கலங்கிய நீர் புகுந்தது. பன்வேல் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், துறைமுகப் பாதையில் ரயில்கள் 10-15 நிமிடங்கள் தாமதமாகச் சென்றன.


நவி மும்பையை இணைக்கும் முக்கிய சாலையான சியோன்-பன்வேல் நெடுஞ்சாலை, குறிப்பாக கார்கர் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. நீண்ட விடுமுறைக்கு பிறகு மும்பைக்குத் திரும்பும் பயணிகளால் இந்த நெரிசல் மேலும் அதிகரித்தது. இன்றும் மழை  விட்டு விட்டுப் பெய்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


புகைப்படம்: ரஹமத் கான்