மும்பைக்கு இன்று ரெட் அலர்ட்... வெளுத்து வாங்கும் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Su.tha Arivalagan
Jun 24, 2026,10:03 AM IST

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை களை கட்டத் தொடங்கியுள்ளது. 


கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு இன்று மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதிதீவிர கனமழை எச்சரிக்கை:




வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மும்பை மற்றும் பால்கர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக மிக கடுமையான அல்லது அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், மற்றொரு முக்கிய மாவட்டமான தானே பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


நேற்று முதல் நீடித்து வரும் தொடர் மழையினால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மும்பையின் வாழ்வாதாரமாக கருதப்படும் உள்ளூர் ரயில் சேவைகளும் சில இடங்களில் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.


பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்:


ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, மும்பை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசர கால தேவைகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


இன்று மழையின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், நீர்நிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், அடுத்த சில நாட்களுக்கு மழையின் தாக்கம் நீடிக்கக்கூடும் என்பதால் அதிகாரிகள் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.