முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

Su.tha Arivalagan
Jan 18, 2026,11:12 AM IST

- ந.மகாலட்சுமி


காலப் பிரம்மா

யுகங்கள் பல கடந்து நின்றாலும் - உன்

ஈரடிப் பாதச்சுவடு இன்னும் மாறவில்லை!

எழுத்துக்கள் எல்லாம் உன்னிடம் வந்து - தான்

பொருள் பெற்றுப் போனது உன் வரிசையில்!

அறம் வளர்த்த பேராசான்

அறமெனும் விளக்கை ஏற்றி வைத்தாய் - மனித

அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!

"ஒழுக்கம் விழுப்பம் தரும்" என்றே - உலகுக்கு

உன்னத ஒழுக்கத்தின் வேரைச் சொன்னாய்!

மண்ணுக்கான மாமறை

மன்னன் முதல் எளியோன் வரை - இங்கே

மண்ணில் வாழும் முறையைச் சொன்னாய்!

கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி - நீ

குறுகத் தரித்தாய் உலகப் பொதுமறை!

காலம் வென்ற கவிஞன்

மொழி கடந்து, நாடு கடந்து, இனம் கடந்து - உன்

மறை மட்டும் மனிதத்தை ஆளுகின்றதே!

காகிதத்தில் வாழ்வதல்ல உன் கவிதை - அது

காலத்தின் நெற்றியில் எழுதிய வைர வரி!




பிறப்பொக்கும் பேராண்மை

பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை என்றாய்

சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையால் என்றாய்!

சமத்துவப் போர்க்களம் அன்றே கண்ட - நீ

சரித்திரம் போற்றும் சரிநிகர் ஞானி!

வாழ்த்தி வணங்குவோம்

குடுமி முதல் பாதம் வரை நின்ற சிலையல்ல நீ!

குறள் எனும் வடிவில் உலவும் உயிர் நீ!


(ந.மகாலட்சுமி, ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர். இலக்கியத் துறையில் 50க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். பணியாற்றுவது, பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்)