நீ தானே எந்தன் பவள மல்லி!

Su.tha Arivalagan
Jun 13, 2026,10:35 AM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


காசு கொடுக்கத் தேவையில்லை...

கடையைத் தேடி அலையவில்லை...


ரோஜாப்பூ பூக்காத நிலத்திலும் 

மல்லிகைப்பூ மலராத பொழுதிலும் 


வெள்ளை வெள்ளையாய்..

கொள்ளை கொள்ளையாய்...




மரமெல்லாம் பூத்துக்குலுங்கும் ...

மஞ்சணத்திப் பூ...


மஞ்சணத்திப் பூவே..

மழலையின் மனம் கவர்ந்த பூவே...


மஞ்சணத்திப் பூவே..

நறுமணம் கமழும் பூவே!


நடு சாமத்தில் மலரும்

நட்சத்திர வடிவ நறுமுகைப்பூவே


ஆசை ஆசையாய் 

என் பாவாடையில் அள்ளி வந்த அலரே


மஞ்சணத்திப் பூப்பூத்தால்

மழை வரும் என்ற என் பாட்டிக்கு 

வானிலை அறிக்கை தரும் வானொலிப்பூவே...


விதவிதமாய் பூக்கள் இன்றிருந்தாலும்...


மலரும் நினைவுகளைக்  கண்முன்னே நிறுத்தும்

வெண்பட்டுப் பூவே...

நீயே 

என் மனம் கவர்ந்த பூ!


அடுக்கு மல்லி ஜாதிமல்லி குண்டுமல்லி அந்தி மல்லி..

எத்தனை மல்லி வந்தாலும்...


நீ தானே என் பவளமல்லி!

எங்க ஊரு அமுதமல்லி!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).