வானவில் என்னும் மாயவில்
- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
வானத்தைக் கூட்டி
வாசல் தெளித்து
ஏழு வர்ணத்தில்
அரை வட்டம் வரைந்து
வானவில் என்ற பெயர் சூட்டிய...
வாத்தியாரு...
வாத்தி யாரு... கொஞ்சம் கேட்டுக்கூறு...
கேட்கப் போறேன்...
சில கேள்வி ஜோரு...
கோணமானி இல்லாமல்...
கவராயம் எடுத்துச் செல்லாமல்...
இப்படி ஓர் அரை வட்டம்....
எந்த ஏணி போட்டு..
ஏறி அங்கு வரைந்தார்....
ஏழு வண்ணங்கள் மட்டும்
ஏன் எடுத்துச் சென்றார்....
மற்றதை எங்கே ...
மறந்து விட்டுச் சென்றார்...
இந்தக் காலக் குட்டிகளின்...
ஏடாகூடக் கேள்விகள்...
அடக்க முடியா சிரிப்பை...
அடக்கிவிட்டு விடை கொடுத்தேன்
காலை மாலை மட்டுமே...
கதிரவனின் ஒளிக்கதிர் மழைத்துளியில் பட்டுமே
ஊடுருவிச் செல்லுமே...
வேகம் குறைந்து கதிர் கொஞ்சம் வளையுமே...
அத்தோடு வெள்ளை ஒளி பிரிந்துமே...
அழகாய் ஏழு வண்ணம் கிட்டுமே...
மழைத்துளி விட்டொளி
வெளியேறி ...
வில்லாக மாறுமே...
இப்படித்தான் ஏழு வண்ண வானவில்...
எழிலாய் வானில் தோன்றுமே....
ஊதா, கருநீலம், நீலம்....
பச்சை, மஞ்சள், ஆரஞ்சு...
பளிச்சென்ற சிவப்பு....
ஏழு வண்ணங்கள் இவைதானே...
எட்டாத அதிசயம் என்பேனே....
அரைவட்டம் இல்லையடா .....
மலை உச்சியில் நின்று பார்த்தால்...
அது முழு வட்டம் என்றுனக்கு புரியுமடா...
சுட்டி குட்டி அரும்புகளிடமும்...
ஆராய்ச்சி விதையைத் தூவி விட்டு...
அறிவியல் ஆர்வம் வளர்ப்போமே....
அப்துல் கலாம் போல் ஆக்குவோமே....
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).