இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!

Meenakshi
Jul 10, 2025,05:15 PM IST

கும்பகோணம்: அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை வரக்கூடாது என்று அன்புமணிக்கு  ராமதாஸ் கண்டிஷன் போட்டுள்ளார்.


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதல் போக்கு விரைவில் முடிந்துவிடும் என்று பாமகவினர் கூறி வரும் நிலையில், இந்த மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் மாறி மாறி கூறி வருகின்றனர். அது மட்டும் இன்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அன்புமணியின் ஆதரவாளர்களை  ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்குவதும், அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்களை அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




இந்த நிலையில், இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பகிரங்கமாக குற்ற சாற்றுவதும் மோதலின் உச்சத்தை காட்டுகிறது.  இந்த மோதலுக்கு இடையே தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள எஸ் சி டி மஹாலில் பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் தலைமையில் தஞ்சாவூர்  மற்றும் திருவாரூர் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 


அந்த பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது. தேவை என்றால் அன்புமணி எனது பெயரை இனிசியலாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தசரதன் ஆணையை ஏற்ற ராமர் வனவாசம் சென்றார்.  ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சிலர் கூறி வருகின்றனர். இந்த ஐந்து வயது குழந்தை தான் மூன்று வருடங்களுக்கு முன்னர் அன்புமணியை பாமக தலைவர் ஆக்கினேன்.  நான் அவரை செயல் தலைவர் என்றுதான் சொல்கிறேன். மக்களை சந்திக்க வேண்டும். மக்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் கூறுகிறேன். உங்களுக்குத் தெரியாமல் தேர்தல் கூட்டணி இருக்காது என்று தெரிவித்துள்ளார்.