தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!

Su.tha Arivalagan
Jan 11, 2026,12:20 PM IST

- ந. தீபலட்சுமி


தென்றல் காற்று தாலாட்ட 

தென்னங்கீற்று தலையாட்ட 

குயிலின் ஓசை இசை பாட 

இதோ 

வானவில்லை உடையாக உடுத்தி 

சிங்காரமாய் தன்னை மிடுக்கி

மேளதாளத்தை இடியாய் முழக்கி 

சலங்கை சத்தத்தை சந்தமாக்கி 

பளிச்சென்ற மின்னலாய் தலைநிமிர்ந்து 

அடியெடுத்து வைத்த மேகமகள்.




அந்தோ.....

என்னவாயிற்றோ.....?

ஏனிந்த மாற்றமோ....?

பளிங்கு போன்ற 

தெளிந்த முகத்தில் 

ஏனிந்த கருமையோ...?

நிமிர்ந்த தலையினை- சற்றே 

குனிந்து பார்த்ததன் விளைவோ...?

பார் போற்றும் பெண்கள் 

பாரினில் படும் பாட்டை 

பார்த்தவுடன் பட்டென 

மடைதிறந்த வெள்ளமாக 

வந்தது கண்ணீர் 

மழை!


(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப் பள்ளி , சத்துவாச்சாரி , வேலூர் மாவட்டம்)