ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!
மதுரை: ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு என அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசுகையில், ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்து சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் கட்சியின் முடிவு. அதில் கருத்து சொல்ல முடியாது. விஜய் இப்போது தான் களத்திற்கு வந்துள்ளார். போக போக தான் எல்லாம் தெரியும். அதிகாரம் என்று வரும் போது அடக்குமுறை இருக்கத்தான் செய்யும்.
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு. ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியலாக பார்க்கிறோம். அறிவியல் உண்மையை உணர்ந்ததால் இதை செய்கிறேன்.
படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது. இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி. எங்கள் ஊரில் இதேபோல் இத்திட்டத்தில் மனுக்களை பெற்று அதை ஆற்றில் வீசினார்கள்.
பாஜக, ஆர்எஸ்எஸ் கோட்பாடு என்னவோ அப்படித்தான் பாஜக இயங்கும். ஆர்எஸ்எஸ் இல் பயிற்சி எடுத்தவர்கள் அந்த சித்தாந்தப்படி தான் இயங்குவார்கள். பாஜகவின் கொள்கைகளுடன் ஒத்து போய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திமுக தான். ஆப்பரேஷன் செந்துறை ஆதரித்தது முதல்வர் தான் அதற்கு பிரதிநிதியாக போய் உலக நாடுகளில் பேசியது. கனிமொழி தான் குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசினார். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து பேசுகிறார்கள். இவர்களிடம் என்ன உறுதித் தன்மை இருக்கிறது.
இன்று நான் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் மக்கள்தான் ஒரு காலத்தில் நான் தங்குவதற்கு விடுதி கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதிகாரங்களை எதிர்த்து போரிட்டு சண்டை போட்டதால் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதற்கெல்லாம் பயப்படக்கூடாது. எங்கள் தாத்தாவின் பெயரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டாம். எங்களுடைய வரலாறு உள்ளது பாண்டியன், நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.