போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி
சென்னை : தமிழக அரசியல் களத்தில் தற்போதைய நிகழ்வுகள் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் முன்வைத்துள்ள காட்டமான விமர்சனங்கள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இன்று கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சினிமா படங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் குறிப்பிட்டு சீமான் சாடியுள்ளார். "ஜனநாயகன்" போன்ற திரைப்படங்களுக்கு அரசு காட்டும் அதீத அக்கறையை விமர்சித்த அவர், "பகுதிநேர ஆசிரியர்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்; ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்படுவதில்லை. ஆனால், பொழுதுபோக்கிற்கு இவ்வளவு முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என்று கவலை தெரிவித்தார். மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் போராட்டங்களை கவனிக்காத முதலமைச்சர், படங்களுக்குப் பதிவிடுவது வேதனையளிப்பதாக அவர் கூறினார்.
தலைநகர் சென்னை மழையினால் தத்தளிப்பதைக் குறிப்பிட்டு திமுக அரசின் 50 ஆண்டுகால அரசியல் பயணத்தை அவர் கேள்வி எழுப்பினார். "தலைநகரமே ஒரு மழைக்கே மிதக்கிறது என்றால், இதுதான் திமுகவின் அரைநூற்றாண்டு கால சாதனையா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். கட்டமைப்புகள் சரியாக இல்லாததைச் சுட்டிக்காட்டிய அவர், இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா என்றும் விமர்சித்துள்ளார்.
அரசியல் கூட்டணிகள் குறித்துப் பேசிய சீமான், தனித்து நின்று களம் காண்பதே உண்மையான வீரம் என்று குறிப்பிட்டார். "ஒரு கூட்டமாக நிற்பதற்கும், கூட்டத்தில் ஒருவனாக இருப்பதற்கும் பெரிய தைரியம் தேவையில்லை; ஆனால் எதற்கும் அஞ்சாமல் தனித்து நிற்பதற்குத்தான் உண்மையான வீரமும் துணிவும் தேவை" என்று முழங்கினார். இது வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் தனித்து நிற்கும் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.