மாநாடு நகரமாகிறது மதுரை.. முருகனைத் தொடர்ந்து ஆடு மாடுகளுக்காக ஒரு மாநாடு!

Su.tha Arivalagan
Jun 25, 2025,11:35 AM IST

மதுரை: மதுரை மாநகரம், மாநாடு மாநகரமாக மாறி வருகிறது. சட்டசபைத் தேர்தல் வருவதால் பலருக்கும் இப்போதுதான் மதுரையை நினைவுக்கு வருகிறது போலும்.. நகரின் அடிப்படைக் கட்டமைப்புகள் மோசமாக இருப்பதாக பலமுறை மக்கள் குமுறல் வெளியிட்டபோதெல்லாம் அதைக் கண்டுக்கவே யாரும் வராத நிலையில் இப்போது அடுத்தடுத்து மாநாடுகளை நடத்த படையெடுக்க ஆரம்பித்துள்ளனர் அரசியல் அமைப்புகள்.


மதுரை மாநகர் கடந்த மழைக்காலத்தின்போது தத்தளித்து தடுமாறியது. பல பகுதிகளில் நீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளானார்கள். அதுதொடர்பாக பெரிய அளவில் சர்ச்சையானபோது மழை நீர் வடி கால்வாய்களை சரி செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் இன்று வரை அது சரி செய்யப்படவில்லை. அதுவும் கூட சமீபத்தில் சர்ச்சையானது. அதேபோல பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து வைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை முழுமை பெறவில்லை. இப்போதுதான் பணிகள் நடந்து கொண்டுள்ளன. இப்படி பல குறைபாடுகளுடன்தான் தமிழ்நாட்டின் முக்கிய மாநகரங்களில் ஒன்றான மதுரை இருந்து வருகிறது.


இந்த நிலையில் 2026  சட்டசபைத் தேர்தலை கணக்கில் கொண்டு மதுரை மக்களிடம் ஓடி வர ஆரம்பித்துள்ளனர் அரசியல் கட்சியினர். முதலில் திமுக சார்பில் பொதுக்குழுக் கூட்டம் கிட்டத்தட்ட பிரமாண்டமான மாநாடு போல நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடுஷோ எல்லாம் போனார். 




இதையடுத்து சமீபத்தில் இந்து முன்னணி சார்பில் மதுரையில் பிரமாண்ட முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. பல லட்சம் பேரைக் கூட்டி நடத்தப்பட்ட இந்த மாநாடு நிச்சயம் அரசியல் சார்பானது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று கூட இந்து வாக்குகளை ஒன்றிணைப்போம் என்பதுதான். 


இந்த சூழ்நிலையில் தற்போது அடுத்து ஒரு மாநாடு நடைபெறப் போகிறது. இந்த மாநாட்டை நடத்தப் போவது நாம் தமிழர் கட்சி. அக்கட்சி சார்பில் மதுரையில் ஆடு மாடுகளுக்கான மாநாடு நடைபெறப் போவதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் சீமான் கூறியிருப்பதாவது:


எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! வருகிற சூலை 10ஆம் தேதி மதுரையில் விராதனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும்  ஆடு-மாடுகளின் மாநாடு!


'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்தை முன்வைத்து இம்மாநாடு நடக்கிறது. பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; அவர்கள் உரிமைக்காகப் பேசுவோம்! 


ஆடும் மாடும் நம் செல்வங்கள்! "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்று நமது வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய மறைமொழியில், கல்வி தான் மானுடர்க்குச் செல்வம்; ஆனால் மாடும் நம் செல்வங்கள் என்பதை வலியுறுத்தி பாடுகிறார். 


அந்த நம் செல்வங்களைப் பாதுகாக்க நாம் எல்லோரும் மதுரையில் கூடுவோம்! பேசும் திறனற்ற உயிர்களுக்காகப் பேசுவோம்; ஆடும் மாடும் அற்ப உயிர்கள் அல்ல; நம் அருமைச் செல்வங்கள்! அவர்களுக்காக, அவர்கள் உரிமைக்காக நாம் உரக்க முழங்குவோம்!


மதுரையில் விராதனூரில் வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று கூடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.


இனி அடுத்து என்ன மாநாடெல்லாம் நடைபெறப் போகிறதோ!