எனக்கு எதிராக பெரும் அரசியல் சதி நடக்கிறது.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு தகவல்!

Meenakshi
Apr 25, 2024,05:57 PM IST

திருநெல்வேலி:  தனக்கு எதிராக பெரும் அரசியல் சதி நடப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


அதிமுகவில் முக்கியத் தலைவராக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதாவின் விசுவாசத்தைப் பெற்ற தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். அந்த சமயத்தில் மேற்கு மாவட்டங்களுக்கு செங்கோட்டையன்தான் ஜெயலலிதாவின் படைத் தளபதியாக திகழ்ந்தார். அதேபோல தெற்க்கில் நயினார் நாகேந்திரன் விளங்கினார்.


பின்னர் ஜெயலலிதாவின் விசுவாசத்தை இழந்து கட்சியில் ஓரம் கட்டப்பட்டு விட்டார் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அவர் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.




இந்த நிலையில்தான் தாம்பரத்தில் ரூ. 4 கோடி சிக்கிய விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் பெயர் அடிபடுகிறது.  சென்னையிலிருந்து நெல்லை சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சதீஷ், நவீன் உள்ளிட்ட 3 பேரை பிடித்த தேர்தல் பறக்கும் படையினர் அவர்களிடமிருந்து ரூ. 4 கோடி பணத்தைப் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.


இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முன்பு நயினார் நாகேந்திரன் கூறுகையில், இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. உண்மையாக இருந்தால் தானே நான் புகார் அளிக்க முடியும். கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்ல, திமுகவிலும் கூட எனக்கு வேண்டப்பட்டவர்கள் இருக்காங்க. அனிதா ராதாகிருஷ்ணன் கூட எனது நண்பர்தான். 


இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை டார்கெட் செய்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. நெல்லையைப் பொறுத்தவரை பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கறாங்க,. திமுகவின் திசை திருப்பும் வேலை இது என்று கூறியிருந்தார்.


இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி என்னுடையது அல்ல என பலமுறை கூறி விட்டேன். அரசியல் சூழ்ச்சி காரணமாகவே எனது பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. எனக்கும் தரப்பட்டுள்ள சம்மன் குறித்து வரும் மே மாதம் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.