ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: பாஜகவிடம் ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை. அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கடந்த 23ஆம் தேதி சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அது மாநாடாக அமைந்துவிட்டது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தாத அளவுக்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் சுமார் ஐந்து லட்சம் பேர் பங்கேற்றார்கள். நிச்சயமாக உறுதியாக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
தேமுதிக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அணி எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் பதில் கிடைக்கும். தமிழக வெற்றி கழகத்தில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட விஜய்க்கு தெரியாது. விஜய்க்கு எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பாஜகவிடம் ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை. அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை. திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்ன ஒற்றை எண்ணத்தில் தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக முதல்வர் முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை கூறி ஆட்சி நடத்தி வருகிறார். விரைவில் தேர்தல் வருவதால் திமுகவிற்கு பயமும் நடுக்கமும் வந்துவிட்டது. பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறார். யாரையும் யாருக்கும் அடிமையாக வைக்கக்கூடிய கட்சி பாஜக இல்லை. அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்.