பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

Su.tha Arivalagan
Mar 21, 2026,02:59 PM IST

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியத் தகவலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்த பிறகு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


தள்ளிப்போன பியூஷ் கோயலின் பயணம் :


தமிழக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், டெல்லியில் பிரதமருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் இருப்பதால், அவரது தமிழகப் பயணம் தற்காலிகமாகத் தள்ளிப் போயுள்ளதாக நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். "மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்ததும் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்துவிடும். பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம் உள்ளதால் அவரது பயணம் தள்ளிப்போயுள்ளது." என நயினார் நாகேந்திரன், தொகுதி பங்கீடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார்.


கூட்டணிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் :




கடந்த சில நாட்களாகவே அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக உயர்மட்டத் தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதில் தீவிரமாக உள்ளது. பியூஷ் கோயல் தமிழகம் வரும் போது, எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்தத் தொகுதிகள் என்பதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தலைவர்களின் டில்லி பயணம் :


ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டில்லி சென்றார். அவரைத் தொடர்ந்து நேற்று பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோரும் டில்லி புறப்பட்டு சென்றனர். இதனால் என்டிஏ கூட்டணியில் என்ன தான் நடக்கிறது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தவெக விஜய், ராமதாஸ் பாமக ஆகியோர் கடைசி நிமிடத்தில் என்டிஏ கூட்டணிக்குள் வந்து விடுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்ததால் தான் என்டிஏ., தொகுதி பங்கீட்டில் இந்த தாமதம் என சொல்லப்படுகிறது.


தற்போது கூட்டணி இல்லை என தவெக திட்டவட்டமாக கூறி விட்டது. மற்றொரு புறம் ராமதாஸ் பாமக, சசிகலாவுடன் இணைந்து புதிய கூட்டணியை அறிவித்து விட்டது. இதனால் தற்போது என்டிஏ.,வில் இருக்கும் கூட்டணிகளுக்கு யாருக்கு எத்தனை சீட் என்பதை முடிவு செய்வதற்காக தான் தலைவர்களின் இந்த டில்லி பயணம் என சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல திமுக தரப்பில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பதற்கு ஏற்க, அவர்களை வீழ்த்தும் வியூகத்துடன் என்டிஏ.,விலும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் திமுக தொகுதி பங்கீடு முடிவுகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், என்டிஏ கூட்டணி தலைவர் டில்லியில் முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.