நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.8.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில்,
நான் நன்றாக இருக்கிறேன்! நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? மக்களைச் சந்தித்தால் தான் எனக்கு உற்சாகம் வரும். என்னுடைய உடலில் ஏதாவது நோய் இருந்தால் அது சரியாகிவிடும். எனவே, மக்கள் பணியை செய்தால், அதுவே எனக்கு உடல் நலத்தை கொடுத்துவிடும் என்று சொல்லிவிட்டு தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
நாட்டு மக்களுடைய நலன் காக்கும் நிகழ்ச்சி. நாட்டு மக்களுடைய நலன்தான், என்னுடைய நலன். நாம் ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது, என்ன நிலைமை இருந்தது என்று யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கொரோனா இரண்டாவது அலை! ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு - ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என்று தமிழ்நாடே நெருக்கடியில் இருந்து தவித்துக் கொண்டிருந்தது. நான் உட்பட, அனைத்து அமைச்சர்களும், அப்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களாக மாறிவிட்டோம். தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, எல்லோரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்தோம்! அதேபோல, இன்றைக்கு கூட, இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலமாக, அனைத்து அமைச்சர்களும் மீண்டும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களாக மாறி அவர்களுடைய மாவட்டத்தில் முகாம்கள் தொடங்கியிருக்கிறார்கள்.
கொரோனா காலத்தில், லாக்டவுனில் பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு தவணையாக நான்காயிரம் ரூபாய் வழங்கினோம். கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி, இதுதான் மக்களைக் காக்கும் உண்மையான அரசு என்று நிரூபித்தோம்! அதுமட்டுமல்ல, கல்வியும் – மருத்துவமும் இந்த ஆட்சியின் இரண்டு கண்கள் என்று சொல்லி, கல்விக்காகவும், அதே அளவுக்கு மருத்துவத்திற்காகவும் ஏராளமான திட்டங்களை செய்ய தொடங்கினோம். நம்முடைய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், இந்தத் துறையை மிகச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டு வருகிறார். அதுனால்தான், ஐ.நா. சபையே விருது கொடுத்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டியிருக்கிறது!
என்னைப் பொறுத்தவரைக்கும், ஒரு திட்டத்தை கொண்டு வருகிறோம் என்றால், அது ஒவ்வொரு தனிமனிதரையும் சென்றடைய வேண்டும்! ஒரே ஒருவர் கூட விடுபட்டுவிடக் கூடாது! அதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். இன்றைக்கு தொடங்கியிருக்கின்ற இந்த திட்டத்தில், தொடர்ந்து ஆயிரத்தி 256 முகாம்கள் நடைபெறப் போகிறது! சிறப்பு மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கின்ற ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் அவர்களுக்கெல்லாம் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.
ஒவ்வொரு முகாம்களிலும், மருத்துவர்கள் உள்பட 200 மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள். 17 தனித்துவமான மருத்துவ சேவைகள் இந்த முகாம்களில் இருக்கும். சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்பு உடையவர்கள், இதய நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக - பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இந்த முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படும்.
முகாம்களில், அனைத்து பயனாளிகளுக்கும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான இரத்த அணுக்கள் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள் செய்யப்பட இருக்கிறது. பொது மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின்படி, E.C.G, எக்கோ, X-Ray, ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனைகள், பெண்களுக்கான கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட இருக்கிறது.
இந்த முகாமின் சிறப்பம்சம் என்று நான் சொல்வது, உங்கள் டெஸ்ட் ரிப்போர்ட் அனைத்தும் மொத்தமாக ஃபைல் செய்து உங்களிடம் வழங்கிவிடுவோம். இந்த ரிப்போர்ட், உங்களுடைய மெடிக்கல் ஹிஸ்டரி போன்றது! எதிர்காலத்தில், நீங்கள் எந்த ட்ரீட்மெண்ட்டிற்கு சென்றாலும், எந்த ஹாஸ்பிட்டலுக்கு சென்றாலும், இந்த ரிப்போர்ட் உங்களுக்குப் பயன்படும்! இந்த முகாம்கள் மூலமாக, இதில் பயனடைகின்ற எல்லோருடைய நலனும் பாதுகாக்கப்படும் என்ற உறுதியை நான் அளிக்கின்றேன். நம்முடைய அரசின் குறிக்கோள், நகர்ப்புறத்தில், நன்றாக படித்து, வசதியானவர்களுக்கு கிடைக்கின்ற மருத்துவ சேவை - கிராமப்புறத்தில் இருக்கின்ற ஏழை எளிய பாமர மக்களுக்கும் கிடைக்கவேண்டும். அதை உறுதி செய்வோம்!
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். அப்படி நம்முடைய உடல்நலம் நன்றாக இருந்தால்தான் நம்மால் மகிழ்ச்சியாக வாழமுடியும் – உழைக்க முடியும் – சாதிக்க முடியும். மருத்துவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், சில நாட்களுக்கு முன்னால், நம்முடைய திராவிட இயக்கத்தின் ஆசிரியர் அய்யா அவர்கள், எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதில், மருத்துவமனைக்கு வருகின்றவர்களை நோயாளிகள் என்று அழைக்க கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதுவும் சரிதான்! ஏனென்றால், எல்லோருக்கும் உடலில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை இருக்கும்; அதற்காக அவர்களை நோயாளி என்று சொல்லக்கூடாது!
மருத்துவர்களையும் - மருத்துவமனைகளையும் நாடி வருகின்றவர்கள் மருத்துவப் பயனாளிகளாக நாம் பார்க்க வேண்டும்! இந்த முகாம்களுக்கு வருகின்ற மக்களையும், மருத்துவப் பயனாளிகளாகதான் நீங்கள் பார்க்க வேண்டும்! அடுத்து, மருத்துவப் பணியாளர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, உங்கள் குடும்பங்களில் ஒருவர் வந்தால் எப்படி கவனித்துக் கொள்வீர்களோ, அதேபோல, இந்த முகாம்களுக்கு வருகின்றவர்களையும் அக்கறையுடன் பரிவுடன் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்! அதேபோல, மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது, இந்த முகாம்கள் உங்கள் பகுதிகளில் என்றைக்கு நடைபெறுகிறது? என்னென்ன சேவைகள் வழங்கப்படுகிறது என்று நீங்கள்தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்! அவர்கள் பயன்பெற அத்தனை உதவிகளையும் நீங்கள் செய்யவேண்டும்!
நீங்கள் ஏற்படுத்துகின்ற விழிப்புணர்வால், ஒருவருடைய உயிர் காப்பாற்றப்படலாம். ஒரு குடும்பத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்படலாம். எனவே, இதில் உங்களுடைய பங்களிப்பும் மிகவும் அவசியம்! எதிலும், எப்போதும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்றாக இருக்கவேண்டும்! இதுதான் என்னுடைய விருப்பம்! அப்படி, மருத்துவச் சேவைகள் வழங்குவதிலும், மக்களுடைய உடல்நலனைப் பாதுகாப்பதிலும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்றாக இருக்கவேண்டும்! இதுபோன்ற திட்டங்களால் அது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் நலமான உங்களுடைய வாழ்வுக்கு வாழ்த்துகளைச் சொல்லி விடைபெறுகிறேன் என்று கூறியுள்ளார்.