Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

Su.tha Arivalagan
May 02, 2026,10:48 AM IST

சென்னை:  மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணைந்து, நாடு முழுவதும் புதிய அவசரக்கால எச்சரிக்கை அமைப்பை (Cell Broadcast Alert System) இன்று சோதித்துப் பார்க்கின்றன.


இயற்கைப் பேரிடர்களான சுனாமி, நிலநடுக்கம், மின்னல் பாதிப்புகள் அல்லது மனிதர்களால் ஏற்படும் விபத்துகளின் போது, பொதுமக்களுக்கு மிக விரைவாகத் தகவல் தெரிவிப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது.


இந்தச் சோதனையின் போது, உங்கள் மொபைல் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) வரும். அப்போது உங்கள் போன் வழக்கத்திற்கு மாறாக அதிக சத்தத்துடன் ஒலிக்கலாம் அல்லது அதிர்வுக்குள்ளாகலாம்.




இது ஒரு மாதிரிச் சோதனை மட்டுமே. எனவே, உங்கள் மொபைலுக்கு இத்தகைய மெசேஜ் வந்தால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.


இந்தச் செய்தியைப் பெற்ற பிறகு நீங்கள் எந்தப் பதிலும் அனுப்பத் தேவையில்லை.


ஆங்கிலம், ஹிந்தி மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் (தமிழ் உட்பட) இந்த எச்சரிக்கைச் செய்திகள் அனுப்பப்படுகின்றன.


சாதாரண எஸ்எம்எஸ்-களைப் போலன்றி, இந்த ‘செல் பிராட்காஸ்ட்’ நுட்பம் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள லட்சக்கணக்கான மொபைல்களுக்கு உடனடியாகத் தகவலைச் சென்றடையச் செய்யும். நெட்வொர்க் நெரிசலாக இருந்தாலும் இந்த எச்சரிக்கை தடையின்றிச் செல்லும் என்பது இதன் தனிச்சிறப்பு.


ஏற்கனவே மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தச் சோதனை, தற்போது நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.