கோர வெள்ளம்.. "உதவி தேவையில்லை.. இந்தியா, சீனா, அமெரிக்கா இழப்பீடு தர வேண்டும்".. நேபாளம்
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு காரணமாக இந்தியா, அமெரிக்கா, சீனாவைக் குற்றம் சாட்டியுள்ளது நேபாளம். இதற்காக இழப்பீடும் கோரியுள்ளது.
நேபாளத்தின் போதேகோஷி நதிப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை என அஞ்சப்படுகிறது. இந்நிலையைத் தொடர்ந்து, அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் காலநிலை இழப்பீடு (Climate Compensation) கேட்டுள்ளது நேபாளம்.
இது குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் அளித்த பேட்டியில், "உலகளவில் காலநிலை மாற்றத்திற்கு நேபாளத்தின் பங்களிப்பு மிகவும் குறைவு. ஆனால் பனிப்பாறைகள் உருகுவது மற்றும் தீவிர இயற்கை பேரிடர்களால் பெரும் பாதிப்பை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இது நாங்கள் உருவாக்காத உலகளாவிய பிரச்சினைக்கு நாங்கள் செலுத்தும் மிகப்பெரிய விலை" என்று தெரிவித்துள்ளார்.
நேபாளம் தனக்கு வழங்கப்படும் நிதி உதவியை தானம் அல்லது தொண்டு எனக் கருதாமல், அது பெரிய நாடுகளின் சட்டப்பூர்வ மற்றும் தார்மீகப் பொறுப்பு என்றும் நேபாள அரசு வலியுறுத்தியுள்ளது.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த அழிவையும் காலநிலை நீதிக்கான கோரிக்கையையும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற, ஐ.நா-வின் 'இழப்பு மற்றும் சேத நிதியம்' அமைப்பை நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அணுகியுள்ளது.
இந்தியாவும் சீனாவும் தற்போதைய புகாமி உமிழ்வில் முன்னணியில் உள்ள நிலையில், வரலாற்று ரீதியாக அதிக உமிழ்வை ஏற்படுத்தியது அமெரிக்கா என்பதால், இம்மாபெரும் உமிழ்வு நாடுகள் நேபாளம் போன்ற பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என நேபாள அரசு தனது தூதரக வழிமுறைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்த விவகாரம் எந்த கோணத்தில் செல்லப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை நேபாளம் வேகப்படுத்தியுள்ளது என்பது மட்டும் உறுதி.