இந்தியா திரும்பி வரும் சோழர் காலத்து செப்பேடுகள்.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
டெல்லி: நெதர்லாந்து நாட்டு வசம் இதுவரை இருந்து வந்த சோழர் காலத்து செப்பேடுகள், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இவற்றை இந்தியா கொண்டு வரவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு நெதர்லாந்து அரசு, தன் வசம் இருந்து வந்த சோழர் காலத்து செப்பேடுகளை இந்தியாவிடம் ஒப்படைத்தது. இதை பிரதமர் நரேந்திர மோடி வசம், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஒப்படைத்தார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியான ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன.
மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.