யுபிஐ-யில் யாருக்காவது பணம் அனுப்பப் போறீங்களா.. முதல்ல இதைப் படிச்சுட்டுப் proceed பண்ணுங்க!

Su.tha Arivalagan
Aug 01, 2025,01:19 PM IST

டெல்லி: இந்தியாவில் UPI பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆகஸ்ட் 1, 2025 முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 


NPCI (National Payments Corporation of India) இந்த விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் காரணமாக UPI செயலிகளின் செயல்பாடு மேம்படும். பண பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். மோசடிகளில் இருந்து பயனர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Google Pay, PhonePe, Paytm போன்ற அனைத்து UPI சேவை வழங்குநர்களும் இந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும். இந்த புதிய மாற்றங்கள் பயனர்களுக்கு என்ன பலன் தரும்? டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.




புதிய விதிமுறைப்படி UPI செயலிகளில் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸ் செக் செய்ய முடியும். அதிகப்படியான பயன்பாடு இருக்கும் நேரங்களில், செயலிகள் பேலன்ஸ் செக் செய்வதை தற்காலிகமாக நிறுத்தலாம். இனி ஒவ்வொரு பரிவர்த்தனைக்குப் பிறகும் பேலன்ஸ் தானாகவே காட்டப்படும். இதனால் அடிக்கடி பேலன்ஸ் செக் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.


தானியங்கி பணம் செலுத்துதலுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தானியங்கி பணம் செலுத்துதல் (autopay) நடைபெறும். காலை 10:00 மணிக்குள், மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இரவு 9:30 மணிக்கு பிறகு autopay பரிவர்த்தனைகள் நடைபெறும். அதிகப்படியான பயன்பாடு காரணமாக autopay பரிவர்த்தனை தோல்வியடைந்தால், மீண்டும் முயற்சி செய்யப்படும். அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தால், பணம் செலுத்துதல் தானாகவே ரத்து செய்யப்படும்.


வங்கிக் கணக்கு விவரங்கள் பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை பார்ப்பதற்கு ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே அனுமதி உண்டு. பயனர்கள் UPI செயலியில் தங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்த பிறகு, இந்த வசதியை பயன்படுத்த முடியும். இது பாதுகாப்பை அதிகரிக்கும்.


பரிவர்த்தனை நிலையை விரைவாக தெரிந்து கொள்ளலாம். பணம் எடுக்கப்பட்டும், ஆனால் சேர வேண்டிய இடத்தில் சேராமல் இருக்கும் பிரச்சனைகள் இனி இருக்காது. ஆகஸ்ட் மாதம் முதல், நிலுவையில் உள்ள பரிவர்த்தனைகள் உடனடியாக சரி செய்யப்படும். பரிவர்த்தனை நிலையை மூன்று முறை மட்டுமே செக் செய்ய முடியும். ஒவ்வொரு முறை செக் செய்வதற்கும் 90 வினாடிகள் இடைவெளி இருக்க வேண்டும். இது சர்வரின் சுமையை குறைக்கும்.


யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பணம் அனுப்பும் முன், பெறுபவரின் பெயர் மற்றும் பரிவர்த்தனை ஐடி (Transaction ID) காட்டப்படும். இதன் மூலம் பயனர்கள் சரியான நபருக்கு பணம் அனுப்புகிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மோசடி பரிவர்த்தனைகளை தவிர்க்க இது உதவும். "பணம் அனுப்பும் முன், பெறுபவரின் பெயர் மற்றும் பரிவர்த்தனை ஐடி காட்டப்படும்" என்று NPCI தெரிவித்துள்ளது.


விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறைகளை மீறும் சேவை வழங்குநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று NPCI எச்சரித்துள்ளது. UPI API பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதிக அபராதம் விதிக்கப்படும். புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது தற்காலிகமாக நிறுத்தப்படும்.


ஜூன் 2025 இல் மட்டும் 11 பில்லியனுக்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்தியா தான் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. UPI பயன்பாடு கிரெடிட் கார்டுகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் அரசு சேவைகள் வரை விரிவடைகிறது. இந்த புதிய விதிமுறைகள் UPI சேவையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும். பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும். "UPI சேவையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்த புதிய விதிமுறைகள் உதவும்" என்று NPCI கூறுகிறது.


இந்த புதிய விதிமுறைகள் UPI பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.