இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 2 இஸ்லாமிய மத குருக்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை மற்றும் தீவிர முயற்சி காரணமாக, ஏமன் நாட்டில் நாளை மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவின் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா, 2017 ஆம் ஆண்டு தனது முன்னாள் வணிகப் பங்குதாரரான மஹ்தியைக் கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய குற்றத்திற்காக 2020 இல் மரணதண்டனை விதிக்கப்பட்டார். அவரது இறுதி மேல்முறையீடு 2023 ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து நாளை அவரது தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அவர் சனாவில் உள்ள சிறையில் உள்ளார்.
இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரது தண்டனைக்குப் பரிகாரமாக பிளட் மணி கொடுக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதிலும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மத்திய அரசும் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் தற்போது ஏமன் நாட்டில் ஹவுதி போராட்டாக்காரர்கள் கையில் ஆட்சி உள்ளதால், அரசால் அதிகாரப்பூர்வமாக யாருடனும் பேச முடியவில்லை. இதனால் ஓரளவுக்கு மேல் தங்களால் முடியாது என்று மத்திய அரசும் கூறி விட்டது.
இந்த நிலையில்தான் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மூத்த சன்னி மத குருக்கள் இந்த விவகாரத்தில் களம் இறங்கினர். நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பதற்காக அவர்கள் ஏமன் நாட்டு மத குருக்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் படியாக நிமிஷா பிரியாவின் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமிய அறிஞர் ஏ.பி. அபூபக்கர் முசல்யாரின் வேண்டுகோளின் பேரில், சூஃபி அறிஞர் ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸ் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு நிமிஷா பிரியாவால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலாப் அப்துல் மஹ்தியின் குடும்பத்தினருடன் ஷேக் ஹபீப் உமரின் பிரதிநிதிகள் தாமர் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு முக்கியச் சந்திப்பை நடத்த உள்ளனர்.
இதற்கிடையே மஹ்தியின் குடும்பத்தினரிடம் பிளட் மணியை ஏற்றுக் கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்றுக் கொண்டால் மரண தண்டனை ரத்தாகும் வாய்ப்பு உள்ளது.