நிதி ஆயோக் கூட்டம்: இந்த மாநில முதல்வர்கள் எல்லாம் புறக்கணிச்சிருக்காங்க.. யார் யார் தெரியுமா?

Meenakshi
May 24, 2025,05:51 PM IST

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.


கடந்த 2015ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது தான் நிதி ஆயோக். தேசிய வளர்ச்சியில் மாநிலங்களிடையே பங்கு, அரசின் திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி ஆயோக் அமைப்பு.   ஏற்படுத்தப்பட்டது.




கடந்த 2015ம் ஆண்டு முதல் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அதன்படி இந்த கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டம் 10வது கூட்டமாகும். 


இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை கடந்த ஆண்டு புறக்கணித்த தமிழ்நாடு முதல்வர் மு..ஸ்டாலின் இந்தாண்டு கலந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில், 20 மாநில முதல்வர்களும் 6 யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களும் கலந்து கொண்டனர்.


இன்று நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் புறக்கணித்துள்ளனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என முதல்வர் சித்தராமையா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.